சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டிகளில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்கை இந்தியா துரத்தினாலும் இந்தியாவுக்கு இந்த போட்டி ஏதோ அல்வா சாப்பிட்டது போல் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை. இந்த வெற்றிக்காக இந்திய அணி கடுமையாக போராட வேண்டியதாக இருந்தது.

கே.எல்.ராகுல்,கோலி ஆகியோர் மூலம் இந்திய அணி 41.2 ஓவரில் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது வெயில் சுட்டெரித்தது. கடும் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர். 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்துவிட்டு பேட்டிங்கும் செய்ய வேண்டும் என்றால் அது கே எல் ராகுலுக்கு எவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுத்திருக்கும்.
இது குறித்து பேசிய கே எல் ராகுல் 50 ஓவர் வெயிலில் விக்கெட் கீப்பிங் செய்ததால் இன்னிங்ஸ் இடைவெளியில் குளித்துவிட்டு ஒரு அரை மணி நேரம் ஹாயாக காலை நீட்டி அமர்ந்து ஓய்வு எடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்களுடைய அணியின் டாப் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் உடனடியாக களத்திற்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நானும் விராட் கோலி பேட்டிங் செய்யும்போது பெரிய அளவில் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. ஏனெனில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். விராட் கோலி என்னிடம் டெஸ்ட் கிரிக்கெட் போல் கொஞ்ச நேரம் விளையாடு என்று கூறினார். இந்திய அணிக்காக வெற்றியை பெற்று தந்தது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தொடக்கத்தில் கொஞ்சம் சாதகமாக செயல்பட்டது. அது இறுதியில் பனிப்பொழிவு கொஞ்சம் இருந்ததால் பவுலர்களால் நினைத்தது போல் பந்து வீச முடியவில்லை. இந்த ஆடுகளத்தின் பவுன்சும் கணிக்க முடியாத வகையில் இருந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானதும் கிடையாது. அதேசமயம் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம் என்றும் சொல்ல முடியாது.ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. நீங்கள் தென்னிந்தியாவில் எங்கு சென்றாலும் குறிப்பாக சென்னையில் இது போன்ற கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஆடுகளம் தான் கிடைக்கும் என்று கே எல் ராகுல் கூறினார்.