கேப்டனின் அன்புத் தம்பி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுல் மிகவும் சொதப்பலாக பேட்டிங் செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பில் நிரூபிக்க தவறினார். அது தான் அவரை அணியில் இருந்து நீக்க காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், கேப்டனின் அன்புத் தம்பியாக கருதப்படும் ராகுல் அத்தனை எளிதில் நீக்கப்படுவாரா?
மோசமான பார்ம்
ராகுல் கடந்த 2018ஆம் ஆண்டு மிகவும் மோசமான பார்மில் இருந்தார். ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தும், ரன் குவிக்காமல் தடுமாறினார். அவர் ஒரு காலத்தில் டெஸ்ட் பேட்டிங் சராசரி 44 வைத்து இருந்தார். ஆனால், அது 34ஆக குறைந்தது.
உலகக்கோப்பை எழுச்சி
எனினும், இந்தியா ஏ அணிக்காக ஆடிய அவர், ராகுல் டிராவிட் ஆலோசனைகளை பெற்று தன் பார்மை மீட்டார். ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடரில் எழுச்சி அடைந்தார். அதனால், டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ராகுல் வாய்ப்பு பெற்றார்.
மீண்டும் சறுக்கல்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் துவக்க வீரராக ஆடும் வாய்ப்பை அளித்த கேப்டன் கோலி, இந்த வாய்ப்பில் நிச்சயம் அவர் நிரூபித்தே ஆக வேண்டும் என்றும் கூறி இருந்தார். ஆனால், அந்த தொடரில் 4 இன்னிங்க்ஸ்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதிகரித்த விமர்சனம்
ராகுல் ஆட்டமிழக்கும் விதம் தான் சிக்கலை ஏற்படுத்தியது. தேவையே இல்லாமல் பந்தை அடிக்க முற்பட்டு தன் விக்கெட்டை பறி கொடுக்கிறார் என விமர்சகர்கள் அவரை விளாசினர். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்தன.
ரோஹித் சர்மாவால் அழுத்தம்
மேலும், ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்காமல், மோசமாக ஆடும் ராகுலுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கிறீர்கள்? என்ற விமர்சனமும் எழுந்தது. அதனால், ராகுலின் டெஸ்ட் வாய்ப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரசாத் என்ன சொன்னார்?
இந்த நிலையில் பேசிய இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ராகுலின் பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர் நீண்ட நேரம் பேட்டிங் ஆடி தன் பார்மை மீட்க வேண்டும் என கூறி இருந்தார்.
நீக்கம்
அதை வைத்தே ராகுல் டெஸ்ட் அணியில் நீக்கப்படுவார். ரோஹித் சர்மா அணியில் துவக்க வீரராக ஆடுவார் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால், கேப்டன் கோலி ராகுலுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற ஒரு தகவலும் அடிபடுகிறது.
இருவரும் தேர்வு
கோலியின் விருப்ப வீரர்கள் பட்டியலில் இருக்கும் ராகுல் அத்தனை எளிதில் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டார். இந்தியா அடுத்து ஆட உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா - ராகுல் இருவருமே அணியில் தேர்வு செய்யப்படலாம்.
ரோஹித்துக்கு சிக்கல்
ராகுல் ஓரிரு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். அதில் அவர் சரியாக ரன் குவிக்காத பட்சத்தில் தான் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவுக்கு அத்தனை எளிதில் வாய்ப்பு கிடைத்து விடாது.