மும்பை: இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தத் தொடரில் முதல் போட்டி அல்லது முதல் இரண்டு போட்டிகளின் போது கேப்டன் ரோஹித் சர்மா விடுப்பு எடுத்துக் கொள்வார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
அவரது தனிப்பட்ட வேலை காரணமாக அவர் முதல் போட்டியில் ஆட முடியாத நிலையில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ரோஹித் சர்மா இல்லாதபோது இந்திய அணியின் கேப்டனாக யார் இருப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் அது போன்ற சூழ்நிலைகளில அணியின் துணை கேப்டனே கேப்டன் பொறுப்பை ஏற்பார்.

சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக யாரும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தற்காலிக கேப்டனாக செயல்படப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து அதிக முறை இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வழி நடத்தியவர் கே எல் ராகுல் தான். அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், 2022இல் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார்.
முன்பு இந்திய அணியின் துணை கேப்டனாக அன் மூன்று வித அணிகளிலும் இருந்த ராகுல், பின்னர் அடிக்கடி ஏற்பட்ட காயங்களின் காரணமாக அணியில் இருந்து விலகியதால் அந்த பதவியை இழந்தார். ஆனாலும், அனுபவ அடிப்படையில் கே எல் ராகுலுக்கு தற்காலிக கேப்டன் பதவி அளிக்கப்பட வேண்டும். எனினும், பிசிசிஐ நிச்சயமாக கே எல் ராகுலுக்கு மட்டும் தற்காலிக கேப்டன் பதவியை அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களின் போது வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், அனுபவ அடிப்படையிலும் முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக இருப்பதாலும் அவரது தலைமையை இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையிலும் அவரையே தற்காலிக கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. சுப்மன் கில்லை ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக பிசிசிஐ தேர்வு செய்து இருக்கும் நிலையில், அவருக்கு தற்காலிக கேப்டன் பதவி அளிக்கப்படுமா? என்ற கேள்வியும் உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி என்பது அதிக அழுத்தம் நிறைந்த ஒன்றாக இருக்கும். இளம் வீரரான சுப்மன் கில் அந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டு கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, கே எல் ராகுல், பும்ரா, சுப்மன் கில் ஆகிய மூவரில் பும்ராவுக்கே கேப்டனாக அதிக வாய்ப்பு உள்ளது.