மான்செஸ்டர்: மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தடுமாறினாலும், தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் புதிய மைல்கல்லை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்திய அணியின் அனுபவமிக்க வீரரான கே.எல். ராகுல், சர்வதேச கிரிக்கெட்டில் 9,000 ரன்களைக் கடந்த 16வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த முக்கியமான போட்டிக்கு முன்பாக, இந்த இமாலய சாதனையை எட்ட அவருக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 14 ரன்களைக் கடந்தபோது இந்த மகத்தான மைல்கல்லை அவர் எட்டினார்.

இதுவரை 219 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ராகுல், 19 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் 9,000 ரன்களைக் கடந்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்த சாதனையை ராகுல் எட்டியபோது, இந்திய அணி பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து அணி, 669 ரன்கள் குவித்து 311 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையைப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேற, இந்திய அணி ரன் கணக்கைத் தொடங்கு முன்பே 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்த இக்கட்டான சூழலில், கேப்டன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல், நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். மிகவும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார்.
இந்த போட்டியில் ராகுல் இந்த ஒரு சாதனை மட்டும் செய்யவில்லை. முன்னதாக, போட்டியின் முதல் நாளிலேயே அவர் இங்கிலாந்து மண்ணில் 1000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு பிறகு இங்கிலாந்தில் 1000 டெஸ்ட் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையையும் பெற்றார்.
சுனில் கவாஸ்கர் 16 போட்டிகளில் 1152 ரன்கள் எடுத்துள்ளார். ராகுல் தற்போது 12 போட்டிகளில் 1064* ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், கே.எல். ராகுலின் நிதான ஆட்டம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.