மும்பை: விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதால், ODI மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான்,தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இப்போதைக்கு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் விளையாடி வருவதால், அவர்களுக்கு அதிக அளவு வாய்ப்புகள் அவசியம் என்று அவர் கூறினார்.
ஜனவரி 11-ல் வதோதராவில் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில், இந்தத் தொடரின் முக்கியத்துவம் குறித்து பதான் கேள்வி எழுப்பப்பட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர், இரு ஜாம்பவான்களும் அரிதாகவே விளையாடி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

"நான் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். மூன்று ஒருநாள் போட்டிகளுக்குப் பதிலாக ஏன் ஐந்து போட்டிகளை நடத்த முடியாது? முத்தரப்பு அல்லது 4 அணிகளை கொண்ட தொடரை ஏன் ஏற்பாடு செய்யக் கூடாது? இந்த இரு ஜாம்பவான்களும் ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுவதால், அதை ஏன் ஏற்பாடு செய்யக் கூடாது? ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் திரும்பியிருந்தால், அதை இந்த இருவரும்தான் கொண்டு வந்திருக்கிறார்கள்."
"இந்த வீரர்கள் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும். இந்தியாவுக்காக விளையாடாதபோது உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும். அவர்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறார்களோ, அவ்வளவு நல்லது," என்று பதான் குறிப்பிட்டார்.
பதான் குறிப்பிட்டதுபோல, விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் 2025-26 விஜய் ஹசாரே டிராபி தொடரில் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளனர். கோலி இரண்டு இன்னிங்ஸ்களில் 104.00 சராசரியுடன் 208 ரன்கள் குவித்தார். ரோஹித் ஒரு போட்டியில் 94 பந்துகளில் 155 ரன்கள் அடித்தார், பின்னர் ஒரு கோல்டன் டக்-கில் ஆட்டமிழந்தார்.
இர்ஃபான் பதானின் கருத்துடன் உடன்பட்ட முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், கோலி, ரோஹித் ஷர்மாவை ஒருநாள் போட்டிகளில் அடிக்கடி பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். ரசிகர்கள், பார்வையாளர்கள் மத்தியில் அவர்கள் ஏற்படுத்தும் பெரிய ஈர்ப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியா இவர்களுக்கு அதிக ஒருநாள் தொடர்களை நடத்த வேண்டும் என ஆரோன் வலியுறுத்தினார்.
"முந்தைய தொடர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக ரோஹித் ஷர்மா கூட்டத்தையும் பார்வையாளர்களையும் ஈர்ப்பதால், இந்தியா தற்போது நடத்தும் தொடர்களை விட அதிக தொடர்களை நடத்த வேண்டும். இந்த இருவரும் 'பாக்ஸ் ஆபிஸ்' வீரர்கள்," என்று வருண் ஆரோன் குறிப்பிட்டார்.
"வயது ஒரு பொருட்டல்ல" என்பதை நிரூபித்துள்ளதாகக் கூறினார். "ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் இயன்றவரை விளையாட வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். அவர்கள் டெஸ்ட், டி20யில் விளையாடாதது வருத்தம் அளித்தாலும், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் உடற்தகுதி ரீதியாக தன்னை மறுசீரமைத்துக் கொண்டார். கோலி ஆஸ்திரேலியாவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டிக்குப் பிறகு தனது பார்மை மேலும் பல படிகள் முன்னேற்றியுள்ளார். இது வயதை விட மனமே முக்கியம் என்பதைக் காட்டுகிறது" என்று ஆரோன் விவரித்தார்.
2025 ஆம் ஆண்டில், விராட் கோலி 13 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 65.10 சராசரியுடன் 651 ரன்கள் குவித்தார். அதே ஆண்டில், ரோஹித் ஷர்மா 14 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 50.00 சராசரியுடன் 650 ரன்கள் எடுத்துள்ளார்.