மொகாலி: தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. பிறந்த நாள் காணும், விராட் கோஹ்லி, 1 ரன்னில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவருகிறது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.

டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கிலும் தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றிவிட்டது. தற்போது, 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட், பஞ்சாப் மாநிலம், மொகாலியில் இன்று தொடங்கி உள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
முரளி விஜய், தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4 பந்துகளை மட்டுமே சந்தித்த தவான், பிளான்டர் பந்து வீச்சில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதையடுத்து விஜயுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். ஸ்கோர் 63ஆக இருந்தபோது, புஜாரா 31 ரன்களில் நடையை கட்டினார்.
இதையடுத்து விராட் கோஹ்லி களமிறங்கினார். சரிவில் இருக்கும் அணியை மீட்டெடுப்பார் என்று ரசிகர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அதிலும், கோஹ்லிக்கு இன்று பிறந்த நாள் என்பதால், அவர் தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வகையில் ஷாட்டுகளை விளாசுவார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், 4 பந்துகளை மட்டுமே சந்தித்த கோஹ்லி, 1 ரன் மட்டுமே எடுத்து ரபடா பந்து வீச்சில், டீன் எல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரபடாவுக்கு இது சர்வதேச டெஸ்ட் அரங்கின் முதல் விக்கெட்டாகும். கோஹ்லியின் ஆட்டத்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.