கொல்கத்தா: எனக்கு ஃபேர்வெல் கொடுப்பதற்காக கொல்கத்தா ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி என்று சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி கான்வே, ரஹானே மற்றும் துபேவின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் விளாசியது. இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதனால் சென்னை அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பேசுகையில், ஈடன் கார்டன் மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். இம்முறை சென்னை அணியின் ஜெர்சியில் வந்த அனைத்து ரசிகர்கள் அடுத்த முறை கொல்கத்தா அணியின் ஜெர்சியில் தான் வரப் போகிறார்கள்.
எனக்கு ஃபேர்வெல் கொடுப்பதற்காக இப்படி மஞ்சள் ஜெர்சியில் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களின் பணியையும், ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இன்றைய போட்டியில் ஒரு பக்கம் பவுண்டரி அருகிலும், இன்னொரு பக்கம் பவுண்டரி எல்லை நீளமாகவும் இருந்தது. அதனால் பவர் பிளே ஓவர்களிலேயே நாங்கள் விக்கெட்டை வீழ்த்தி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.
கொல்கத்தா அணியில் அதிகளவில் பவர் ஹிட்டர்கள் இருக்கிறார்கள். சில நேரங்களில் எதிரணிக்கு கூடுதல் மரியாதை கொடுக்க வேண்டும். 20 ஓவர்கள் முடியும் வரை கிரிக்கெட்டில் எதுவும் முடியவில்லை என்பதே உண்மை. எப்போதும் காயமடைந்த வீரர்களால் நாம் சோகமடைய தேவையில்லை. அவர்களின் பணிகளை செய்ய தயாராக இருக்கும் இளம் வீரர்களை கண்டறிய வேண்டும். சென்னை அணியில் அனைத்து இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை அணியின் வலைபயிற்சியில் பேட்டிங் செய்ய வாய்ப்பளிப்பதற்கு முன்பாக அவர்களின் திறமையை அறிந்து வைத்திருப்போம். ரஹானேவுக்கு நாங்கள் முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். அவருக்கு தேவையான பொசிஷனை கொடுத்திருக்கிறோம். ஒரு அணியாக செயல்படும் போது, சில வீரர்களின் தங்களின் இடத்தை மற்றவர்களுக்கு கொடுத்து, அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். அதுதான் சென்னை அணியில் நடக்கிறது என்று தெரிவித்தார்.