அகமதாபாத்: இன்று மாலை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடுகிறது. இரு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், அதனை தொடர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் இரு லீக் ஆட்டங்களில் சென்னை, டெல்லி அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது.

அதேபோல் குஜராத் அணி எந்தவொரு தனி வீரரையும் சார்ந்து இல்லாமல் அணியாக சிறப்பாக ஆடுகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு வீரர் முன் நின்று வென்று கொடுக்கிறார். ஒரு போட்டியில் ரஷீத் கான் என்றால், இன்னொரு போட்டியில் சாய் சுதர்சன் என்று குஜராத் அணி வலிமையாக உள்ளது. பேட்டிங்கில் விருத்திமான் சாஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா என்று பெரிய பட்டாளமே உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளது.
அதேபோல் பந்து வீச்சில் முகமது ஷமி, ரஷீத் கான், அல்ஜாரி ஜோசப், யாஷ் துல், ஜோஸ் லிட்டில் என்று அனைவரும் அசத்தி வருகிறார்கள். சொந்த மண்ணில் மீண்டும் விளையாடும் குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் கொல்கத்தா அணி செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது.
ஆனால் பெங்களூரு அணிக்கு எதிரான 2வது போட்டியில் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியது. ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் மிரட்டினார் என்றால், பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா அசத்திவிட்டனர். அதேபோல் வேகப்பந்துவீச்சில் சவுதி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இருப்பதால் குஜராத் அணிக்கு சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணியின் மூளையாக சந்திரகாந்த் பண்டிட் இருப்பதால், அவ்வளவு எளிதாக கேகேஆர் அணியை புறந்தள்ளிட முடியாது.
அதேபோல் வெங்கடேஷ் ஐயர் அணியில் நீடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், அதனை தொடர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிசம வாய்ப்பு இருக்கும் என்பதால், இரு அணிகளும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் சொந்த மண் என்பதால், குஜராத் அணியை வீழ்த்த கேகேஆர் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.