புனே: ஐபிஎல் கிரிக்கெட்டில் புனே அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தொடர்ந்து 4 வது வெற்றியையும் பதிவு செய்தது கொல்கத்தா.
புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் சீசன் லீக் ஆட்டத்தில் டோணி தலைமையிலான புனே அணி அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் காம்பீர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். புனே அணியில் பீட்டர்சனுக்கு பதிலாக அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டிருந்தார்.

தொடக்க வீரர் டூ பிளஸ்சிஸ் அல் ஹசன் பந்து வீச்சில் 4 ரன்களில் கீளின் போல்ட் ஆனார். இதனை அடுத்து ரகானேவும், சுமித்தும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 31 ரன்கள் எடுத்திருந்த போது சுமித் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய பெரேரா (12), மோர்கல் (16) ரன் குவிக்க முடியாமல் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் டோணி ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார்.
சிறப்பாக விளையாடி வந்த ரகானே 52 பந்துகளில் 67 ரன்கள் குவித்து நரேன் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக ஆடிய டோனி 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் புனே அணி 5 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
புனேவை தொடர்ந்து இறங்கிய கொல்கத்தா அணிக்கு உத்தப்பா முதல் பந்திலே அவுட் ஆகினார். கேப்டன் காம்பீர் 11 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் 3 ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். தொடக்கத்தில் தடுமாறிய கொல்கத்தாவிற்கு யூசுப் பதான் 36 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். பொறுப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 60 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர்.
கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. பெரேரா வீசிய அந்த ஓவரின் 3வது பந்தில் உமேஷ் யாதவ் அதிரடியாக சிக்ஸர் விளாசினார். இதனால் கொல்கத்தா 19.3 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மும்பைக்கு எதிராக வெற்றி கண்ட டோணி தலைமையிலான புனே அணி அதன் பிறகு குஜராத், பஞ்சாப், பெங்களூரு, கொல்கத்தா அணிகளிடம் வரிசையாக 4 வது தோல்வியை சந்தித்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் டோணி அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பேதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.