கொல்கத்தா: 2025-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வென்றபோது நடந்த கொண்டாட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் குழப்பம் இன்னும் கண்முன்னே நிழலாடும் நிலையில், இன்று (டிசம்பர் 13) கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியும் அதே போன்றதொரு கலவர பூமியாக மாறியுள்ளது.
இந்தியாவில் விளையாட்டு ஜாம்பவான்களைக் காண ரசிகர்கள் காட்டும் ஆர்வம், நிர்வாகத்தின் மோசமான ஏற்பாடுகளால் எப்படி விபரீதமாக முடிகிறது என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் கசப்பான உதாரணங்களாக மாறியுள்ளன.

'GOAT India Tour' பயணமாக இன்று கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு மெஸ்ஸி வருகை தந்தார். ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், மெஸ்ஸி மைதானத்தை வலம் வருவார், சில சாகசங்களைச் செய்வார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே மெஸ்ஸி மைதானத்தில் இருந்தார். அவரையும் மேடையில் இருந்தவர்கள் மறைத்துக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், நாற்காலிகளை உடைத்தும், பாட்டில்களை வீசியும், பேனர்களைக் கிழித்தும் மைதானத்தைச் சூறையாடினர். மெஸ்ஸி பாதியிலேயே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
இன்றைய கொல்கத்தா சம்பவத்தைப் பார்க்கும் போது, கடந்த மே மாதம் நடந்த ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் தான் நினைவுக்கு வருகிறது. 18 வருடக் காத்திருப்புக்குப் பிறகு 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கோப்பையை வென்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும், நகர வீதிகளிலும் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் சின்னசாமி மைதானத்திற்குள் செல்ல எத்தனை ரசிகர்களுக்கு அனுமதி, டிக்கெட் விற்பனை குறித்த விவரம் ஆகியவற்றில் நிலவிய குழப்பம் காரணமாக ரசிகர்கள் மைதான வாயிலில் பெருமளவில் திரண்டனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறியது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல ரசிகர்கள் காயமடைந்தனர். 11 ரசிகர்கள் இறந்தனர். அந்த கொண்டாட்டம் சோகமாக மாறியது.
அதேபோல இன்றைய மெஸ்ஸி நிகழ்விலும் ரசிகர்களின் ஆர்வத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணமாக மாற்ற நினைத்தார்களே தவிர, ரசிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆர்சிபி நிகழ்வில் ஆர்வம் காரணமாகக் கூட்டம் அலைமோதியது என்றால், இங்கே ஏமாற்றப்பட்ட கோபத்தில் ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர்.
ஆர்சிபி வெற்றியின் போதும் சரி, இன்றைய மெஸ்ஸி நிகழ்ச்சியின் போதும் சரி, நிர்வாகத் திறமையின்மை அப்பட்டமாகத் தெரிந்தது. கொள்ளை லாபத்திற்கு டிக்கெட் விற்பது, ஆனால் அதற்கேற்ற வசதிகளைச் செய்து தராதது, விஐபி கலாச்சாரம் காரணமாக உண்மையான ரசிகர்கள் வீரர்களைப் பார்க்க முடியாமல் போவது, உணர்ச்சிவசப்படும் இந்திய ரசிகர்களைக் கையாளத் தெரியாமல் அதிகாரிகள் திணறுவதுஆகியவையே இந்த நிகழ்வுகளுக்கு காரணம்.
கால்பந்து உலகின் உச்சத்தில் இருக்கும் ஒரு வீரரை அழைத்து வந்து, அவருக்கு முன்னாலேயே மைதானத்தை அடித்து நொறுக்கியது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி வெற்றி விழாவில் ஏற்பட்ட கரும்புள்ளி மறைவதற்குள், கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்ச்சி கலவரத்தில் முடிந்தது, இந்தியாவில் பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் தகுதி குறித்துக் கேள்வியை எழுப்பியுள்ளது.