ஹைதராபாத்: காம்பீர் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
9வது சீசன் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடந்த 8வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். கேப்டன் வார்னர் 13 ரன்களிலும், ஷிகர் தவான், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 6 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து இறங்கிய ஓஜா நிதனாமாக விளையாடி 37 ரன்களும், இயன் மார்கன் 51 ரன்களும் சேர்த்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. கொல்கத்தா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 ஓவர்கள் வீசி, 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோர்கல் 2 விக்கெட்டும், ரஸல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
சன்ரைசர்ஸை தொடர்ந்து 143 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ராபின் உத்தப்பா, கேப்டன் காம்பீர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அணியின் ஸ்கோர் 91 ஆக இருந்த போது 38 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய காம்பீர் அரை சதம் அடித்தார்.
அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸல் முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் ஸ்டெம்புகள் தெறிக்க போல்டானார். அதன் பிறகு களமிறங்கிய மணிஷ் பாண்டே கேப்டன் காம்பீருடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார். இறுதியில் கொல்கத்தா அணி 18.2 ஓவரில் 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. காப்பீர் 60 பந்துகளில் 90 ரன்களும், பாண்டே 11 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.