"கே.எல்.ராகுலை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்?".. இந்திய அணி நிர்வாகத்தை விளாசிய ஸ்ரீகாந்த்
சென்னை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுலின் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் வீரர்களுக்கு மன ரீதியான ஓய்வு அளிக்காமல் அடுத்தடுத்து போட்டிகளை நடத்துவதையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இருப்பினும், இத்தொடரில் கே.எல்.ராகுல் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து ஸ்ரீகாந்த் அதிருப்தி அடைந்துள்ளார். தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 5வது வரிசையில் களம் இறங்கிய ராகுல், 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவர் மேலும் பின்தள்ளப்பட்டு 6வது வரிசையில் களம் இறக்கப்பட்டார்.

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஸ்ரீகாந்த், "கே.எல்.ராகுலை 6வது வரிசையில் களம் இறக்குவது அவருக்கும் அணிக்கும் நல்லதல்ல. அவர் 4 அல்லது அதிகபட்சமாக 5வது வரிசையில் தான் பேட்டிங் செய்ய வேண்டும். புதிய வீரர்களை சோதித்துப் பார்க்க விரும்பினால், சுழற்சி முறையை பயன்படுத்தலாம். சில போட்டிகளில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மாற்று வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதை விடுத்து அனுபவ வீரர்களின் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவது அவர்களின் நம்பிக்கையை பாதிக்கும்" என்று கூறினார்.
மேலும், ஐபிஎல் முடிந்த கையோடு, இந்த சுட்டெரிக்கும் கோடை வெயிலில் போட்டிகளை நடத்துவதை ஸ்ரீகாந்த் கடுமையாக எதிர்த்து பேசி உள்ளார். "ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு வீரர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஓய்வு கொடுக்க வேண்டும். வீரர்களுக்கு குடும்பத்துடன் செலவிட நேரமில்லை, விடுமுறையும் இல்லை, மிக முக்கியமாக மன ரீதியான ஓய்வும் இல்லை. தற்போது மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது, அதில் நாம் ஏன் கவனம் செலுத்தக்கூடாது? கிரிக்கெட் வீரர்கள் இந்த கடுமையான வெயிலில் சென்னையில் விளையாடுவது நியாயமற்றது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
