லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாளில், ஆஸி. வீரர் போலாந்த் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே இந்திய வீரர் கேஎஸ் பரத் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அபாரமான சதம் காரணமாக 469 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எவ்வளவு மோசமாக விளையாட முடியுமோ, அந்த அளவிற்கு மோசமாக ஆடியது. டாப் ஆர்டர் வீரர்களில் ஒருவர் கூட 15 ரன்களை தாண்டவில்லை. அதிலும் நீண்ட நாட்களாக கவுண்டி கிரிக்கெட் ஆடிவந்த புஜாரா 13 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இறுதியாக 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
இதனால் ஃபாலோ ஆனை இந்திய அணி வீரர்கள் தவிர்ப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் ரஹானே மற்றும் கேஎஸ் பரத் களத்தில் இருந்ததால் இந்திய ரசிகர்கள் சிறிது நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியுள்ளது. ஆஸி. அணி தரப்பில் போலாந்த் முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே ரஹானே ஒரு ரன் எடுத்து மறுபக்கம் சென்றார்.

இதையடுத்து கேஎஸ் பரத் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். ஏற்கனவே கேஎஸ் பரத்தின் பேட்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், முக்கியமான நேரத்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.