லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 2வது முறையாக விளையாட உள்ளது. கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், இம்முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்று முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வியில் இருந்து இந்திய அணி பாடம் கற்று இருக்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணியின் தேர்வு ஆடுகளத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
கடந்த முறை நியூசிலாந்து அணி சுழல்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கிய போது இந்திய அணியோ 2 சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. இம்முறை ஓவல் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப வீரர்களின் தேர்வு இருக்க வேண்டும். வழக்கமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தான் ஓவல் மைதானத்தில் ஆட்டங்கள் நடக்கும். இம்முறை ஜூன் மாதத்தில் நடக்கவுள்ளதால், எப்படி செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேகமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்திய பிளேயின் லெவன் தேர்வு கவனமாக இருக்க வேண்டும். 2 சுழற்பந்துவீச்சாளர்கள் ஆடினால் நிச்சயம் கேஎஸ் பரத் விளையாட வேண்டும். ஒரு வேளை 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்தால், இஷான் கிஷனுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் ஒரு இடத்திற்கான போட்டியில் இருக்கிறார்கள்.
ஒருவேளை ஓவல் மைதானத்தில் வெயில் நன்றாக இருந்தால் இரு ஸ்பின்னர்களுடன் களமிறங்கலாம். அப்போது அஸ்வின், ஜடேஜா, சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் களமிறங்கலாம். இல்லையென்றால் சிராஜ், ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருடன் களமிறங்க வேண்டும். இதற்கு ஏற்றாற்போல் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.