பிரிட்ஜ்டவுன் : வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் உலகக்கோப்பை கவுண்டவுன் தொடங்கிவிட்டது.இனி வரும் போட்டிகளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள்தான் உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள்.
இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் ஜடேஜாவுக்கு பதில் யார் இடம் பெறுவார் என கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான விடையை இந்திய அணி கண்டுபிடித்து விட்டதாகவே தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய குல்திப் யாதவ் 3 ஓவர்களை வீசி வெறும் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களில் சுருண்டது. இந்த நிலையில் ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு பேசிய குல்தீப் யாதவ் இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல தொடக்கத்தை எங்களுக்கு அளித்தார்கள். முகேஷ் தன்னுடைய அறிமுக ஆட்டத்தில் நன்றாகவே விளையாடினார். ஷர்துல் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் எங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார்கள்.
ஜடேஜாவும் நானும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீசினோம். நான் எப்போதும் போல் என்னுடைய தினசரி பயிற்சிகளை செய்கின்றேன். கடந்த ஒரு ஆண்டாக நான் நன்றாகவே கிரிக்கெட் போட்டியில் செயல்பட்டு வருகின்றேன். தற்போது எல்லாம் நான் விக்கெட்டுகளை விட எப்படி பந்து வீசுவது என்பதில் தான் கவனம் செலுத்துகிறேன். பார்படாஸ் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான சொர்க்கம் என்று பலரும் சொல்வார்கள்.
ஆனால் இங்கு சுழற் பந்துவீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறோம். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது. ஆடுகளத்தில் பவுன்ஸ் இருந்ததால் பேட்ஸ்மேனுக்கு எங்களால் கடும் நெருக்கடி கொடுக்க முடிந்தது. எனக்கும் சாஹலுக்கும் போட்டி இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோம். சாகல் போன்ற சீனியர்கள் அணியில் இருக்கும் போது அவர்கள் நிச்சயமாக நமக்கு உதவுவார்கள்.
இது நம் மீதான உத்வேகத்தை அதிகரிக்கும். நாங்கள் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து விளையாடுகிறோம். இதனால் எங்களுக்கு போட்டியோ பொறாமையோ கிடையாது. நாங்கள் இருவரும் ஒருவரின் ஒருவர் இருப்பை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.