மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் தன் மீது சுமத்திய 35 பக்க புகாருக்கு கிட்டத்தட்ட 15,000 பக்கங்கள் அடங்கிய மகா விரிவான பதிலை அளித்துள்ளார் லலித் மோடி.
ஐபிஎல் ஆணையராக இருந்த லலித் மோடி, பல்வேறு முறைகேடுளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் மோடியை சஸ்பெண்ட் செய்தது கிரிக்கெட் வாரியம். மேலும் மோடி மீது 35 பக்கங்களில் பல்வேறு புகார்களை சுமத்தி நோட்டீஸும் அனுப்பியது.
இதற்கு நேற்று மோடி விளக்கம் அளித்தார். கிட்டத்தட்ட 15,000 பக்கங்கள் கொண்ட மகா விளக்கத்தை அவர் அளித்துள்ளார். அவரது விளக்கமான பதில் அறிக்கை பல்வேறு பெட்டிகளில் வைத்து கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
நான்கு கார்களில் வைத்து இந்த பெட்டிகளை மோடியின் வக்கீல்கள் கொண்டு வந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்தனர். அவற்றை கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி பெற்றுக் கொண்டார்.
மோடிக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே நடந்த இ மெயில் பரிவர்த்தனைகள்,ஏல ஆவணங்கள், அணி நிர்வாகங்களின் ஒப்பந்தங்கள், மீடியா உரிமைகள் குறித்த ஆவணங்கள், உரிமங்கள், ஸ்பான்சர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றின் ஆவணங்களை கிரிக்கெட் வாரியத்திற்கு அளித்துள்ள பதிலில் இணைத்துள்ளாராம் மோடி.
தன் மீதான அனைத்துப் புகார்களையும் மறுத்துள்ள மோடி கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் மற்றும் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிகிறது.
மோடி அளித்துள்ள இந்த மெகா விளக்கத்தை கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களான சஷாங் மனோகர், அருண் ஜேட்லி, சிரயூ அமீன் ஆகியோர் பரிசீலிக்கவுள்ளனர்.
இந்த 15,000 பக்க விளக்கத்தைத் தொடர்ந்து அடுத்து மிக மிக விரிவான இன்னொரு விளக்க அறிக்கையை மோடி தாக்கல் செய்யவுள்ளாராம். இது 37,000 முதல் 45,000 பக்கங்கள் வரை கொண்டதாக அமையும் என மோடியின் வக்கீல் மகமூத் அப்தி கூறியுள்ளார்.