
சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்புக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனு இன்று பிற்பகல் 2 மணிளவில் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லலித் மோடியின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில்,இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள் விவகாரம். இதில் கோர்ட் தலையிட முடியாது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது.
மனுதாரர் மிகப் பெரியவர் என்பதாலோ அல்லது பெரிய பணக்காரர் என்பதாலோ நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது.
லலித் மோடி தனது தரப்பு விளக்கத்தை நேரடியாக பிசிசிஐயின் கூட்டத்திற்குப் போய் வழங்க வேண்டும். அங்கு அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.