மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, சிராஜ் உள்ளிட்டோருக்கு 40 நாட்கள் கூட முழுமையாக ஓய்வு வழங்கப்படாததை இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 12ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய அணி ஜூலை 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, சிராஜ் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கு பின் நேரடியாக இங்கிலாந்து புறப்பட்டதால், இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட 3 மாதம் ஓய்வின்றி விளையாடி வருகின்றனர். தற்போது வெறும் 20 நாட்கள் ஓய்வுக்கு பின் இந்திய வீரர்கள் மீண்டும் அடுத்த கிரிக்கெட் சீசனை தொடங்கவுள்ளனர். உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில் முக்கிய வீரர்களுக்கு முன்னதாக ஓய்வை வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இந்திய சீனியர் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சித்துள்ளார். அதில், இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். கிரிக்கெட்டில் இருந்து சில நாட்கள் ஒதுங்கி இருந்து முழுமையாக ஓய்வை அனுபவிக்க திட்டமிட வேண்டும். ஜூன் 12ஆம் தேதியன்று தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிவடைந்தது.
ஆனால் முழுமையாக 20 நாட்கள் கூட ஓய்வில்லாமல் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய அணி வீரர்கள் பயணிக்க உள்ளனர். ஜூலை முதல் வாரத்திலேயே சில பயிற்சி போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். குறைந்தது 40 நாட்களாவது ஓய்வு கொடுக்க வேண்டாமா? ஒரு புதிய கிரிக்கெட் சீசனை இந்திய வீரர்கள் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.