அகமதாபாத் : : 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வலுவான நிலையில் இருந்தும் சில தவறுகளால் ஆட்டத்தின் மீதான ஆதிக்கத்தை இழந்தது.இதன் மூலம் குஜராத் அணிக்கு எதிராக தொடர்ந்து மூன்று போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்து இருக்கிறது.
இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணி தொடர்ந்து முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியது.இந்த நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி செய்த சில தவறுகளால் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஐபிஎல் தொடர் என்பது இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தொடராக இருந்தாலும் இங்கு வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சில் அனுபவம் இல்லாத வீரர்களை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. குறிப்பாக ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் கூட சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தேர்வு செய்யவில்லை.குறிப்பாக நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் சான்டினரை தேர்வு செய்வதற்கு பதில் தென்னாப்பிரிக்கா வீரர் ஆல்ரவுண்டர் பிரிட்டோரியல் தேர்வு செய்திருக்கலாம்.
ஏற்கனவே இடது கை சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜா இருக்கும்போது, அவரைப் போலவே வந்து வீசும் சாண்ட்னர் தேவையில்லாத ஒரு ஆணி. இதனால் சாண்டனருக்கு பதில் மோயின் அலியை பந்து வீச தோனி பயன்படுத்திருக்கலாம்.இதேபோன்று சிவம் துபே முக்கிய கட்டத்தில் கடந்த சீசனில் பல போட்டிகளில் ரன் எடுக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார். தற்போது மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கி தோனி வெற்றி வாய்ப்பை வீணடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சிவம் துபேக்கு பதில் ஜடேஜா அல்லது தோனியை களமிறங்கி இருந்தால் கூட சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கக்கூடும்.அவ்வளவு ஏன் ஆல் ரவுண்டர்கள் தீபக்சாகர், மிட்செல் சாண்ட்னர் ராஜவர்தன் ஹங்கர்கேகர் ஆகியோரை தோனி பயன்படுத்திருக்கலாம். சிவம் துபே களத்திற்கு வந்ததும் சிஎஸ்கே வின் ரன் அடிக்கும் வேகம் சரிந்தது. மேலும் சிஎஸ்கே அணி வீரர்கள் பில்டிங்கில் கடுமையாக சொதப்பினர்.

சில பவுண்டர்களை அவர்கள் தவறவிட்டார்கள். இதனை எல்லாம் பிடித்திருந்தால் கூட குஜராத் அணிக்கு கடைசி ஓவர்களில் ஒரு 20 ரன் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்கும். குறிப்பாக சிக்ஸர் லைனில் கேட்ச் பிடிக்க முற்பட்ட ருத்ராஜ் பந்தைத் தவறவிட்டு சுப்மன் கில்லுக்கு கூடுதலாக ஒரு 6 ரன்களை சேர்த்து கொடுத்தார்.
மேலும் தேஷ்பாண்டே வீசிய 20 பந்துகளில் குஜராத் அணி 51 ரன்கள் அடித்து இருக்கிறது. இதனால் அவருக்கு இரண்டு ஓவர்களை குறைத்து மோயின் அலிக்கு இரண்டு ஓவர்களை வழங்கி இருக்கலாம். ஆனால் அதையும் தோனி செய்யவில்லை. இது போன்ற தவறுகளால் வெற்றி பெற வேண்டிய ஆட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டு விட்டது.