சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக இதுவரை இறுதி சுற்றுக்கு 9 முறை தகுதி பெற்றிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் யார் என்று கேட்டால் அது நம் சின்ன தல சுரேஷ் ரெய்னா தான். எத்தனை வீரர்கள் வந்தாலும் சுரேஷ் ரெய்னா போன்ற ஒரு வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டுபிடிக்கவே முடியாது. இவ்வளவு சாதனைகளை செய்தும் ரெய்னா தற்போது சென்னை அணியில் இல்லாதது காலம் செய்த கோலமே.

இந்த நிலையில் உச்சகட்ட போட்டிகள், பரபரப்பான சூழல்கள் நிறைந்த ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா தான் படைத்திருக்கிறார். இதுவரை ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 714 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் சுரேஷ் ரெய்னா பெற்றிருக்கிறார்.
ரெய்னா நாக்அவுட் போட்டிகளில் ஏழு முறை அரை சதம் அடித்திருக்கிறார். பிளே ஆப்பில் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். இதே போன்று பிளே ஆப் சுற்றில் 40 சிக்சர்கள் அடித்ததன் மூலம் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையும் ரெய்னா படைத்திருக்கிறார்.
இதே போன்று பிளே ஆப் சுற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையும் ரெய்னா படைத்திருக்கிறார். இந்த கட்டத்தில் அவர் 51 பவுண்டரிகளை விளாசி தள்ளி இருக்கிறார். இதைப் போன்று ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை ரெய்னா வென்று இருக்கிறார்.
குவாலிஃபயர், எலிமினேட்டர் இறுதிப் போட்டி என மூன்று போட்டிகளிலும் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை வென்று இருக்கிறார். ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் ரெய்னா அதிகபட்சமாக 155.35 என ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு வீரர் சென்னை அணியில் தற்போது இல்லாதது தற்போது மிகப்பெரிய பின்னடைவு தான். ரெய்னாவின் இடத்தை யார் நிரப்புவார்கள் என ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மிஸ் யூ சின்ன தல..