மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் எந்தெந்த ரெக்கார்டுகள் எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் படைத்தவர் என்றால் அது சச்சின் மட்டும்தான். 52 வயதாகியும் சச்சின் டெண்டுல்கர் இன்னும் கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பி வருகிறார்.
பாடிய வாய்களும் ஆடிய கால்களும் சும்மா இருக்குமா, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை போன்ற பழமொழிகளுக்கு ஏற்ப சிறு வயதில் எடுத்த பேட்டை இன்னும் அவரால் கீழே வைக்க முடியவில்லை. தன்னுடைய நாற்பதாவது வயதில் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து அவர் ஓய்வுக்குப் பிறகு நன்கொடைகளை சேகரிக்கும் விதமாக பல்வேறு தொடர்களில் விளையாடி வருகிறார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு சேரிட்டி ஃபார் ஹீரோஸ் என்ற தொடரில் சச்சின் இங்கிலாந்தில் விளையாடினார். போரில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யும் விதமாக இந்த தொடர் நடத்தப்பட்டது. இதில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கிய சச்சின் சதம் அடித்து அசத்தினார். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் அடித்த முதல் சதம் இதுவாகும்.
2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் என்ற தொடரில் விளையாடினார். எப்படி நமது சினிமா நடிகர்கள் எனக்கு வாழ்க்கை கொடுத்த மக்களுக்கு நான் எதுவும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறி அரசியலுக்கு வருகிறார்களோ, அதை போல் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு எனக்கு அளித்த கிரிக்கெட்டிற்கு நான் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என இந்தத் தொடரை நடத்தினார்.
அதாவது கிரிக்கெட்டை அமெரிக்காவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக அங்குள்ள பேஸ் பால் மைதானங்களில் கிரிக்கெட் போட்டியை நடத்தினார். இதில் பல முன்னாள் வீரர்களை ஒருங்கிணைத்து அவர் இந்த தொடரை நடத்தினார். வார்னே, போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். இந்த தொடர் பெரிய அளவு வெற்றியை கொடுத்தது.
இதேபோன்று ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய காட்டு தீ ஏற்பட்டது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் அதற்கு உதவி செய்யும் விதமாக ஆஸ்திரேலியாவில் பிக் அப்பில் என ஒரு தொடர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா வீரர்களுடன் பங்கேற்று விளையாடினார். இதேபோன்று 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ரோட் சேப்டி லிக் என சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இதில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். இதில் இந்தியா லெஜென்ட்ஸ் என்ற அணிக்காக சச்சின் ஆடிய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் அளவிலான மன திருப்தியை கொடுத்தது. அதன்பிறகு தற்போது 2025 ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் லீக் என்ற டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மாஸ்டர்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் தலைமை தாங்கி இருக்கிறார். இதில் யுவராஜ் இர்பான் பதான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகிறார்கள்.