லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த டேவிட் வார்னர், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்தின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக 4வது வேகப்பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். இது ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அஸ்வினை விட ஷர்துல் தாக்கூர் அவ்வளவு சிறப்பாக செயல்படுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு பின் டேவிட் வார்னர் - லபுஷேன் இணை வேகமாக ரன்களை சேர்த்து வந்தது. அதேபோல் சிராஜ் மற்றும் ஷமி பந்துவீச்சில் இருந்து வெளியேற்றப்பட்ட பின், ஷர்துல் தாக்கூர் - உமேஷ் யாதவ் கூட்டணி பந்துவீசியது. இதில் உமேஷ் யாதவ் வள்ளலாக மாறி ரன்களை விட்டுக் கொடுக்க, ஷர்துல் தாக்கூரோ சரியான லெந்தை பிடிக்க முடியாமல் திணறினார்.
ஒருமுனையில் சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் உணவு இடைவேளைக்கு முன்பாகவே அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 21வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் 2வது பந்திலேயே பவுண்டரி விளாசப்பட்டது. இதையடுத்து 4வது பந்தை பின்பக்கமாக ஷர்துல் தாக்கூர் வீசினார். அதனை பவுண்டரி அடிக்க முயன்ற வார்னரின் பேட்டில் பந்து தட்டி செல்ல, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் அபாரமாக தாவி கேட்ச் பிடித்தார்.
இதனால் 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து டேவிட் வார்னர் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். பின்னர் 23 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்திய "லார்ட்" தாக்கூரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.