கொல்கத்தா: "விராட் கோலி" பெயரால் கோஷம் எழுப்பிய கொல்கத்தா ரசிகர்களை பார்த்து, லக்னோ அணியின் நவீன் உல் ஹக் வாயில் விரலை வைத்து "சைலன்ஸ்" என்று சைகை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விராட் கோலி - நவீன் உல் ஹக் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. லக்னோ - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான மோதலுக்கு பின் இருவரும் மாறி மாறி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் மோதிக் கொண்டனர். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விராட் கோலியின் ரசிகர்கள் நவீன் உல் ஹக்கை எங்கு சென்றாலும் விரட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு முறை நவீன் உல் ஹக் பந்துவீசும் போதும் "விராட் கோலி" என்று கோஷத்தை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 2வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசப்பட, ரசிகர்கள் நவீன் உல் ஹக்கை வம்புக்கு இழுக்கும் வகையில் விராட் கோலி.. விராட் கோலி என்று கோஷம் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் கேகேஆர் அணியின் குர்பாஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த கேட்சை ரவி பிஷ்னாய் தட்டு தடுமாறி பிடிக்க, அருகில் நின்றிருந்த நவீன் உல் ஹக் உடனடியாக ரசிகர்கள் பக்கம் திரும்பி, வாயில் விரலை வைத்து "சைலன்ஸ்" என்று சிக்னல் மூலம் பதிலடி கொடுத்தார். நவீன் உல் ஹக் ரசிகர்களை நோக்கி விரலை வைத்து சைகை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குஜராத் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் ஆர்சிபி அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் ஆர்சிபி அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். அப்படி முன்னேறினால் ஆர்சிபி - லக்னோ அணிகளுக்கு இடையில் எலிமினேட்டர் போட்டி நடக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.