பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல், பேட்டிங் சராசரியாக 76.25 வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சதம் உட்பட 610 ரன்கள் குவித்துள்ளது, இன்றையப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி மோதுகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டை ஆர்சிபி அணியுடன் தொடங்கியதால், கேஎல் ராகுல் மீது அந்த அணியின் ரசிகர்கள் எப்போதும் பாராட்டு தெரிவித்து வருவர். இதனால் கே.எல்.ராகுலை ஆர்சிபி ரசிகர்கள் குட்டி கோலி என்றும் செல்லமாக அழைப்பார்கள்.

பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்திற்கு முன் ஆர்சிபி அணியில் இருந்து கே.எல்.ராகுல் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்காக மூன்று சீசன்களில் கேப்டனாக விளையாடிய அவர், கடந்த ஆண்டு முதல் லக்னோ அணிக்காக ஆடி வருகிறார். ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறிய பின் ஐபிஎல் தொடரில் கேப்டனாக விளையாடி வரும் கே.எல்.ராகுல், பெங்களூரு அணிக்கு எதிராக மட்டும் அதிரடியில் உச்சத்தை எட்டுவார்.
இதுவரை ஆர்சிபி அணிக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 610 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 132 ரன்களை குவித்துள்ள ராகுல், பேட்டிங் சராசாரியாக 76.25 வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையில் அதிகமாக சிக்கியுள்ள கே.எல்.ராகுல் ஆர்சிபி அணிக்கு எதிராக மட்டும் 147.70 ஸ்ட்ரைக் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சொந்த மாநிலமான கர்நாடகாவில் ஐபிஎல் தொடருக்காக களமிறங்க உள்ளார்.

கடந்த மூன்று போட்டிகளாக பெரியளவில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறி வரும் கே.எல்.ராகுல், இந்தப் போட்டியில் தனது ஃபார்மை மீட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆரஞ்ச் கேப்பிற்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் ராகுல், நடப்பாண்டில் இதுவரை 100 ரன்களை கூட கடக்காமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.