ஐதராபாத்: ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா மிரட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் சொந்த மண்ணில் ஐதராபாத் அணி அடைந்த ஹாட்ரிக் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஐதராபாத் அணி சார்பாக அன்மோல்ப்ரீத் - அபிஷேக் சர்மா கூட்டணி களமிறங்கியது. ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நிலையில், அபிஷேக் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ராகுல் த்ரிப்பாட்டி ஆவேஷ் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் யாஷ் தாக்கூர் வீசிய எதிர்பாராத பவுன்சரால் த்ரிப்பாட்டி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய அன்மோல்ப்ரீத் சிங் 36 ரன்கள் எடுத்து அமித் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும் களத்தில் மார்க்ரம் - கிளாஸன் இணை இருந்ததால், ஐதராபாத் அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அதற்கேற்ப ரவி பிஷ்னாய் பந்திவீச்சில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை விளாசி கிளாஸன் அசத்தினார். இந்த நிலையில் லக்னோ அணிக்கு விக்கெட் தேவையாக இருந்தது. இதனால் கேப்டன் க்ருனால் பாண்டியா பந்தை எடுத்தார்.
க்ருனால் பாண்டியா வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் 28 ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கிளென் பிலிப்ஸ் போல்டாகி வெளியேற, ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டம் ஐதராபாத் அணி பக்கம் திரும்பிய நிலையில், கேப்டன் க்ருனால் பாண்டியா ஒரே ஓவரில் லக்னோ பக்கம் ஆட்டத்தை மாற்றியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.