லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் தோனி களமிறங்கி பேட்டிங் செய்தார். தோனி எப்போது வருவார், சிக்ஸ் அடிப்பார் என லக்னோ ரசிகர்கள் காத்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தோனி கடைசி இரண்டு ஓவர்களில் மீதமிருந்த போது பேட்டிங் செய்ய களமிறங்கினார். அந்த கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் சிஎஸ்கே அணி 34 ரன்களை குவித்தது. தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் குவித்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை கதிகலங்க வைத்தார்.

19வது ஓவரில் தோனி முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால், ஃபோர் மட்டுமே கிடைத்தது. இதை அடுத்து இரண்டாவது பந்தில் ஸ்டம்ப்பை விட்டு விலகிச் சென்ற தோனி, ஸ்கூப் ஷாட் அடித்தார் அதுவும் ஸ்டம்புக்கு நேராக மேலே சென்ற பந்தை திரும்பி நின்று 360 டிகிரியில் சிக்ஸ் அடித்தார். இதுவரை தோனியின் கிரிக்கெட் வாழ்வில் இப்படி ஒரு சிக்ஸ் அடித்ததே இல்லை. ஏபி டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினர் அடிக்கும் ஷாட் இது. அந்த ஸ்கூப் ஷாட்டை கனகச்சிதமாக அடித்தார் தோனி.
லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த நிலையில், தோனி அடித்த ஷாட்டை பார்த்து மிரண்டு போனார். பின்னர் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு ஃபோர் அடித்தார் தோனி. இதை அடுத்து சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
176 ரன்களே குறைவான ஸ்கோர் தான் என்ற போதும் தோனி இல்லையென்றால் சிஎஸ்கே அணியின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். 9 பந்துகளை சந்தித்த தோனி 311 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார்.