கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்குள் இரண்டாவது முறையாக கால் வைத்து அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து லக்னோ அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே லக்னோ அணியின் பிளே ஆப் வாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.

இதன்பின்னர் 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் - வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் கொடுத்தனர். மோசின் கான் வீசிய முதல் ஓவரிலேயே இரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக தொடங்கினார். மீண்டும் நவீன் உல் ஹக் வீசிய 2வது ஓவரில் ஜேசன் ராய் இரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசினார். பின்னர் க்ருனால் பாண்டியா வீசிய 5வது ஓவரில் ஜேசன் ராய் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அசத்தினார். இந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து கேப்டன் நிதிஷ் ராணா 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ஜேசன் ராய் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் ரவி பிஷ்னாய் அட்டாக்கில் வந்ததால், கேகேஆர் அணியின் ரன் ரேட் குறைந்தது. இதனிடையே குர்பாஸ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 16 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 121 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
இதனால் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 56 ரன்கள் தேவைப்பட்டது. அதில் நவீன் உல் ஹக் வீசிய 17வது ஓவரில் 5 ரன்களும், யாஷ் தாக்கூர் வீசிய 18வது ஓவரில் 10 ரன்களும் சேர்க்கப்பட்டன. இதனிடையே ஷர்துல் தாக்கூர் மற்றும் சுனில் நரைனும் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் நவீன் உல் ஹக் வீசிய 19வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி உட்பட ரிங்கு சிங் 20 ரன்களை விளாசினார்.
இதையடுத்து கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிபெற 21 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச யாஷ் தாக்கூர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி 3 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 4வது பந்தில் ரிங்கு சிங் சிக்சர் அடிக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 5வது பந்தில் ரிங்கு சிங் பவுண்டரியை மட்டுமே விளாசினார். பின்னர் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க, லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் 33 பந்துகளில் 67 ரன்களை விளாசினார். இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 17 புள்ளிகளுடன் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், க்ருனால் பாண்டியா தலைமையில் லக்னோ அணி பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. லக்னோ அணி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதால், எலிமினேட்டர் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.