லக்னோ: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய நிலையில், மீண்டும் களத்திற்கு திரும்பாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணி சார்பாக விராட் கோலி - டூ பிளஸிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. லக்னோ அணி சார்பாக முதல் ஓவரை க்ருனால் பாண்டியா வீசினார்.

அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டும் ஆர்சிபி அணி எடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். அந்த ஓவரை பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி அணி, 11 ரன்களை விளாசியது. அந்த ஓவரின் கடைசி பந்தில் டூ பிளஸிஸ் பவுண்டரி விளாசி அசத்தினார். அந்த பவுண்டரியை தடுக்க முயன்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் காயமடைந்தார்.
களத்திலேயே வலது காலில் ஏற்பட்ட வலியால் கேஎல் ராகுல் துடித்தார். இதனால் களத்தில் இருந்து வெளியேறிய கேஎல் ராகுல், நொண்டிக் கொண்டே மற்ற வீரர்களின் உதவியுடன் தான் வெளியேறினார். இதனால் கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இருக்குமோ என்ற ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. ஃபீல்டிங்கில் இருந்து வெளியேறிய கேஎல் ராகுல் மீண்டும் களத்திற்கு திரும்பவே இல்லை.
இருப்பினும் பேட்டிங்கின் போது கேஎல் ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லக்னோ அணியின் தொடக்க வீரராக கைல் மேயர்ஸ் மற்றும் இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனி களமிறங்கினர். இதனால் கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் குறித்து ரசிகர்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. லக்னோ அணி தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.