பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் இன்றையப் போட்டியை சின்னசாமி மைதானத்தில் விளையாட உள்ளதால், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆர்சிபி அணியின் டெத் பவுலிங்கை வலிமையாக்கும் வகையில் வெய்ன் பார்னலை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அதேபோல் பிரேஸ்வெல், கரண் சர்மா நீக்கப்பட்டு, மிடில் ஆர்டரை வலிமையாக்கும் வகையில் லோம்ரோர் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி பந்துவீச்சின் போது இம்பேக்ட் பிளேயராக கரண் சர்மா விளையாட வாய்ப்புள்ளது. அதேபோல் லக்னோ அணி தரப்பில் ஆவேஷ் கான் மற்றும் மார்க் வுட் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரவி பிஷ்னாய் மற்றும் அமித் மிஸ்ரா என்று இரு ஸ்பின்னர்களையும் அணிக்கு லக்னோ அணி கொண்டு வந்துள்ளது. இதனால் ஆயுஷ் படோனி இம்பேக்ட் பிளேயராக கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, டூ பிளஸிஸ், லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அஹ்மத், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், டேவிட் வில்லி, பார்னல், ஹர்சல் படேல், முகமது சிராஜ்
லக்னோ அணி விவரம்: கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டிய, பூரன், உனாத்கட், அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், மார்க் வுட், ரவி பிஷ்னாய்