லக்னோ: இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியை இந்திய அணி 2-2 என சமன் செய்து சாதனை படைத்ததற்கு தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுலின் அபாரமான பேட்டிங்கும் முக்கிய காரணம் ஆகும். ஆனால், கே எல் ராகுலின் முன்னாள் ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) வெளியிட்ட பதிவில் அவரை வேண்டுமென்றே புறக்கணித்து இருப்பதாக ரசிகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய லக்னோவின் பதிவு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றித் தருணங்களைக் கொண்டாடும் வகையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு படத்தொகுப்பை (collage) வெளியிட்டது. அதில், சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, லக்னோ அணியைச் சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் படங்கள் பிரதானமாக இருந்தன. ஆனால், அந்தத் தொடரில் இந்திய அணிக்கு தொடக்க வீரராகக் களமிறங்கி, கடினமான இங்கிலாந்து ஆடுகளங்களில் 53.20 என்ற சராசரியுடன் 532 ரன்கள் குவித்த கே.எல். ராகுலின் ஒரு புகைப்படம் கூட அதில் இடம்பெறவில்லை.
தொடரின் மூன்றாவது அதிகபட்ச ரன் குவித்த வீரரான கே எல் ராகுலின் படம் இல்லாதது தற்செயலான தவறாகத் தெரியவில்லை என்றும், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட புறக்கணிப்பு என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தோதா கணேஷ் தனது எக்ஸ் (X) பக்கத்தில், "இது மிகவும் அசிங்கமாக இருக்கிறது. புதிய பந்தை எதிர்கொண்டு 500+ ரன்கள் குவித்த ஒரு தொடக்க வீரரின் புகைப்படம் கூடவா உங்களுக்குக் கிடைக்கவில்லை?" என்று லக்னோ அணியின் பதிவை மேற்கோள் காட்டி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்களும், "இது மிகவும் அருவருப்பான செயல்", "ராகுலை வேண்டுமென்றே புறக்கணித்து இருக்கிறார்கள்", "லக்னோ அணியின் குணம் இதுதான்" என சமூக வலைதளங்களில் பொரிந்து தள்ளி வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. கே.எல். ராகுல், லக்னோ அணியின் முதல் கேப்டனாக இருந்து, 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், 2024 ஐபிஎல் சீசனின் போது, அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, மைதானத்திலேயே ராகுலுடன் பகிரங்கமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்த சீசனுக்குப் பிறகு, லக்னோ அணி ராகுலை விடுவித்தது. பின்னர், ராகுல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ₹14 கோடிக்கு மாறினார். அதே நேரத்தில், லக்னோ அணி ரிஷப் பண்ட்டை ₹27 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கி கேப்டனாக நியமித்தது. ஒரு வீரராக ராகுல் இங்கிலாந்தில் சாதித்த போதும், அவரது முன்னாள் அணி அவரை இப்படி நடத்தியிருப்பது, இரு தரப்புக்கும் இடையேயான விரிசல் இன்னும் ஆறவில்லை என்பதையே காட்டுவதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.