சென்னை: குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார் தீக்சனா.
ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. குவாலிஃபையர் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் குஜராத் அணியின் வலிமையான பேட்டிங் ஆர்டருக்கு இந்த இலக்கு போதுமானதல்ல என்று பார்க்கப்பட்டது. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் குஜராத் அணியின் ரன்களை கட்டுப்படுத்துவதோடு, சில விக்கெட்டையும் வீழ்த்தினால் மட்டுமே சென்னை அணி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது.
இதற்கேற்ப சாஹாவின் விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்த, அடுத்ததாக விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவே களமிறங்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆடுகளத்தில் பனிப்பொழிவு இல்லாததை அறிந்த தோனி, அட்டாக்கில் தீக்சனாவை கொண்டு வந்தார். நடப்பு சீசனில் தீக்சனா சொல்லிக்கொள்ளும்படியாக பந்துவீசவில்லை என்றாலும், பவர்பிளே ஓவர்களில் அவ்வளவு எளிதாக தீக்சனாவை யாராலும் அட்டாக் செய்ய முடியாது.
அதுமட்டுமல்லாமல் முதல் 5 ஓவர்களில் குஜராத் அணி வெறும் 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால், 6வது ஓவரில் அட்டாக் செய்ய வேண்டிய சூழலில் ஹர்திக் பாண்டியா இருந்தார். சரியாக 6வது ஓவரை தீக்சனா வீச, அந்த ஓவரின் 5வது பந்தில் ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அந்த ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.
தொடர்ந்து 15வது ஓவரை தீக்சனா வீசிய நிலையில், அபாயகரமான வீரரான ராகுல் டிவாட்டியாவை 3 ரன்களில் போல்ட்டாக்கி வெளியேற்றினார். ஒட்டுமொத்தமாக 4 ஓவர்களை வீசிய தீக்சனா வெறும் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தீக்சனாவுக்கு பதிலாக சான்ட்னரை அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரி வந்த சூழலில், அவரின் ஆட்டத்தின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் தோனியின் நம்பிக்கையையும் தீக்சனா காப்பாற்றியுள்ளார்.