சென்னை: டிவிட்டரிலும் கேப்டன் டோணிதான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார்.
ஐசிசி உலகக் கோப்பையின் முதல் சுற்றுப் போட்டிகள் நடந்த சமயத்தில் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட, அலசப்பட்ட, பாராட்டப்பட்ட இந்திய வீரர் டோணிதான்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய கேப்டனாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் டோணி, அவரது சிறப்பான தலைமைத்துவத்துக்காக அனைவராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். காலிறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அவர் கொண்டு வந்த விதம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சுற்றுப் போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூடத் தழுவாமல் இந்தியா, காலிறுதிக்கு வந்து சேர்ந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சிறப்பான பந்து வீச்சு, அருமையான பேட்டிங், துணிச்சலான சேஸிங், பெரிய அளவில் தவறுகள் இல்லாத பீல்டிங் என இந்தியா கலக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் குரூப் போட்டிகள் நடந்த சமயத்தில் டிவிட்டரில் டோணி பற்றித்தான் பலரும் அதிக அளவில் பேசியுள்ளனர். அவருக்கு அடுத்து ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, ஆர்.அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகியோர் பற்றியும் அதிகம் பேசியுள்ளனர்.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில், இரண்டு முறை இந்தியாவின் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் டோணி. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், ஜிம்பாப்வேவுக்கு எதிராகவும் இந்தியாவின் சேஸிங்கை டோணிதான் சிறப்பாக முடித்து வைத்தார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 45 ரன்களை எடுத்த அவர் ஜிம்பாப்வே போட்டியின்போது ஆட்டமிழக்காமல் 85 ரன்களைக் குவித்தார்.
சிறந்த பீல்டிங், பவுலிங் வியூகம், பினிஷிங் என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் டோணி என்பது ரசிகர்களின் தீர்ப்பாகும்.
அடுத்து வரும் நாக் அவுட் போட்டிகளிலும் அடித்து நொறுக்குவாரா டோணி என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.