லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த டெஸ்ட் தொடர் என்பது, இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பு, மாஸ் சீன்ஸ், கமர்ஷியல் ஐட்டங்கள் கொண்ட தொடராக அமைந்தது.
உண்மையிலேயே, இப்படியொரு ஆக்ரோஷமான தொடரை இந்தியா விளையாடும் என ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏன்.. இந்திய வீரர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
முதல் டெஸ்ட் போட்டியில், கடைசி நாளில் கொட்டித் தீர்த்த மழையால் வெற்றி வாய்ப்பை இழந்த இந்தியா, லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், கடைசி ஒன்றரை நாளில் இஙகிலாந்தை பொளந்து கட்டி வென்றது. தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்தது. பிறகு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் "இது எங்க ஏரியா.. உள்ள வராத" மோடில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது இங்கிலாந்து. பிறகு, லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி தொடரில் 2-1 என்று முன்னிலைப் பெற்றது.
இந்தியாவின் இந்த ஆக்ரோஷத்தையும், அட்டாக்கிங் ஆட்டத்தையும் இங்கிலாந்து எதிர்பார்க்கவில்லை. அல்லது இங்கிலாந்து இந்தியாவை குறைத்து எடை போட்டுவிட்டது எனலாம். கடந்த கால வரலாற்றை சற்று திருப்பிப் பார்த்தோமெனில் SENA நாடுகளில், இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்முலா என்பது Defensive Structure கொண்டிருக்கும். அதாவது, "பாகுபலி" படத்தில் போரின் போது, "கட்டப்பா" பாத்திரம் பயன்படுத்திய பிரம்மாண்ட தற்காப்பு கேடயத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படியொரு கேடயத்தை தான் ஒவ்வொரு தொடருக்கும் இந்தியா கொண்டுச் செல்லும். இது ஒன்லி SENA நாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களுக்கு மட்டுமே.
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தவரையில் கூட, இதே ஃபார்முலா தான். இதனை முதன் முதலில் உடைத்தெரிந்திருப்பவர் விராட் கோலி. அதுவும் எப்படி தெரியுமா? முதன் முறையாக இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தை Self - Defense ஆட வைத்தார். அதுவும் இரண்டு போட்டிகளில். இந்தியா இங்கு பயன்படுத்திய ஃபார்முலா "Attacking". முதல் உலகப் போர் வீரரும், இங்கிலாந்து கவிஞருமான சீக்ஃபிரைட் சசூனின் "கவுண்ட்டர் அட்டாக்" கவிதைகளைப் போல இருந்தது இந்திய வீரர்களின் ஆட்டம். இங்கிலாந்து இந்தியாவிடம் அடி பணிந்தது.
இப்படி ரசிகர்கள் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு அபார டெஸ்ட் தொடரை கட்டமைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இப்போது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துள்ளது. இந்திய அணி நிர்வாகத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று (செப்.10) தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட, இந்திய நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதனால், இந்த கடைசி டெஸ்ட் போட்டியே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தான், ஒருவித பயத்தில் இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதேசமயம், வீரர்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்றே வந்திருக்கிறது. இங்கிலாந்து வீர்ரகளோ, 'நாங்கள் களமிறங்க தயார்' என்று தெரிவித்துவிட்டனர். இந்திய அணியும் ரெடி தான். கோலியும் ரெடி தான்! கடைசி டெஸ்ட் போட்டியிலும் வென்று கோப்பையை முத்தமிட வேண்டும் என்பதே அவர்களின் கனவும் கூட. ஆனால், இந்த கனவுக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது ஐபிஎல். ஆம்! செப்.15ம் தேதி இந்த கடைசி போட்டி முடிவடையும் நிலையில், வெறும் நான்கு நாட்கள் இடைவெளியில், அதாவது செப்.19ம் தேதி, அமீரகத்தில் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த கடைசி டெஸ்ட் போட்டியை, இரு அணி நிர்வாகங்களும் நினைத்திருந்தால் இன்னும் 2 நாட்கள் தள்ளிப்போட்டுக் கூட நடத்தியிருக்கலாம். ஏன்... ஒருவாரம் தள்ளிப்போட்டு கூட நடத்தியிருக்கலாம். ஆனால், செப்.19ல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளதால், அதன் தேதிகளை மாற்ற முடியாது என்ற காரணத்திலும், ஒருவேளை கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் பட்சத்தில் வீரர்கள் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட ஐபிஎல் அணிகள் பாதிக்கப்படும் என்ற பயத்தினால், பல கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் விளையாடவில்லை என்றால் ஐபிஎல் உரிமையாளர்கள் இழப்பை சந்திக்க நேரிடுமே என்ற கலக்கத்தால், கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் இருந்து பின்வாங்கியது இந்திய அணி.
இதே பிசிசிஐ, இலங்கைக்கு அனுப்பிய இந்திய 'ஏ' அணி தான், தொடரின் இறுதியில், இந்திய அணி நிர்வாகத்தில் கொரோனா தொற்று ஏற்பட, ஏகப்பட்ட இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட போதும், "தொடர்ந்து விளையாடுகிறோம்.. தொடரை ரத்து செய்ய வேண்டாம்" என்று சொல்லி, வெறும் 5 பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு விளையாடி, டி20 தொடரை இழந்தது. அதுவும் இந்திய அணி தான். இத்தனைக்கும் அது ஒரு சாதாரண தொடர் தான். அதற்கே, தொடரை ரத்து செய்யாமல் விளையாடிய இந்திய அணி, இந்த பரபரப்பான டெஸ்ட் தொடரை இப்படி அரைகுறையாய் முடிப்பதன் ஒரே காரணம் ஐபிஎல் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவு என்ன என்பது இதுவரை இறுதியாகவில்லை. கடைசி போட்டியில் இந்தியா விளையாட முடியாது என்று கூறியிருப்பதால், 2-1 என்று தொடரை இந்தியா வென்றுவிட்டதாக அறிவிக்க நிச்சயம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளாது. அப்படியெனில், கடைசி போட்டியில் இங்கிலாந்து ஜெயித்ததாக அறிவிக்க வேண்டும் என அந்நாட்டு வாரியம் நிர்பந்திக்கும். அதற்கு பிசிசிஐ ஒப்புக் கொண்டால், இந்திய வீரர்கள் தங்கள் உழைப்பைக்கொட்டி பெற்ற முன்னிலை வீணாய் போகும். இத்தொடர் 2-2 என்று டிராவாகும். இப்போது, பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது என்றும், வேறு தேதியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்" என்று கூறியிருக்கிறது. வேறு தேதி என்றால் எப்போது? அடுத்த வருடமா? அல்லது 2 வருடத்துக்கு பிறகா? அப்படியெனில், இந்த டெஸ்ட் தொடரின் முடிவு? கோப்பை யாருக்கு? இதற்கு பெயர் டெஸ்ட் தொடரா? இந்த கேள்விகள் எதற்கும் பிசிசிஐ அறிக்கையில் பதில் இல்லை.