மணீஷோட ஸ்டிரைக் ரேட் ரொம்ப கம்மி... பெரிய இலக்கை சேஸ் செய்ய அது பத்தாது... நெத்தியடி கொடுத்த மூத்த வீரர்
சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 3வது போட்டியில் கேகேஆர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
எஸ்ஆர்எச் அணியின் மணீஷ் பாண்டே 40 பந்துகளில் 55 ரன்களை அடித்திருந்தார். ஆயினும் அந்த அணியால் வெற்றியை சாத்தியப்படுத்த முடியவில்லை.
மணீஷ் பாண்டே சிறிதளவு தன்னுடைய செயல்பாட்டை நேற்றைய போட்டியில் அதிகரித்திருந்தால் வெற்றி வசப்பட்டிக்கும் என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

3வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 3வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கேகேஆர் அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங்கை வெளிப்படுத்தியது. இதையடுத்து எஸ்ஆர்எச் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி கொண்டது.

இலக்கை பூர்த்தி செய்ய முடியவில்லை
கேகேஆரின் 188 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவதாக களமிறங்கிய எஸ்ஆர்எச் அணியின் முதல் இரண்டு வீரர்கள் சொதப்பிய நிலையில் 3வதாக களமிறங்கிய மணீஷ் பாண்டே, சிறப்பாக விளையாடிய போதிலும் அவரால் இலக்கை பூர்த்தி செய்ய முடியவில்லை.

92 ரன்கள் பார்ட்னர்ஷிப்
அவர் பேர்ஸ்டோவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 92 ரன்களை அடித்திருந்தார். முதல் இரண்டு விக்கெட்டுகள் விரைவிலேயே விழுந்த நிலையில், இவர்களின் இந்த பார்ட்னர்ஷிப் அணிக்கு சிறப்பாக உதவியது. பாண்டே 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்களை அடித்திருந்தார்.

ஆகாஷ் சோப்ரா பாராட்டு
இந்நிலையில் பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடியதாகவும் தன்னுடைய செலக்ஷனை நியாயப்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் பாண்டே ஸ்டிரைக் ரேட் 127ஆக இருந்ததாகவும் பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது அது போதுமானது இல்லை என்றும் சோப்ரா கூறியுள்ளார்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்
ஆயினும் இது அணியின் முதல் போட்டி என்பதால் முதல் போட்டியில் அதிக ரன்களை எடுக்கும்போது அது தொடர்ந்து ஆடும் போட்டிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் என்றும் சோப்ரா கூறியுள்ளார். இதனிடையே நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய அப்துல் சமத்தை முன்னதாக ஏன் எஸ்ஆர்எச் களமிறக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Click it and Unblock the Notifications