கைப்புள்ள கடைய மூடு
ஐபிஎல் தொடர் காரணமாக கடுமையான பயோ-பபுள் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால், அவற்றை மீறி, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள், இதர கொல்கத்தா அணி வீரர்கள், என்று கொரோனா அங்கேயும் தனது கோர முகத்தை காட்ட அரண்டு போனது பிசிசிஐ. என்ன செய்வதற்கு என்று யோசிப்பதற்குள், அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் ஆக, 'கைப்புள்ள கடைய மூடு' என்று சரண்டரானது.
தப்பித்த மைக் ஹஸ்ஸி
இந்திய வீரர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்ப, வெளிநாட்டு வீரர்கள் பலர் மாலத்தீவு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக, ஆஸ்திரேலிய வீரர்கள். அவர்கள் நாளை (மே.16) ஆஸ்திரேலியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹஸ்ஸிக்கு, நேற்று நான்காவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் 'நெகட்டிவ்' என்று வந்ததால் அவர் சென்னையை விட்டு வெளியேற பெட்டியைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
வீரர்கள் தயக்கம்
இந்த நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு, வீரர்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில், 'ஐபிஎல் 2021 சீரிஸ் தொடங்குவதற்கு முன், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு லேசான காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படும் என்று அவர்கள் தயக்கம் காட்டினார்கள். அதே சமயம், சில வெளிநாட்டு வீரர்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால், இந்திய வீரர்கள் தடுப்பூசிக்கு பயந்தனர்.
தடுப்பூசி வேண்டாம்
தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தியும் சில இந்திய வீரர்கள் கேட்கவில்லை. இதில், அவர்களை குறை சொல்லி பலனில்லை.போதுமான விழிப்புணர்வு இல்லாததே பயத்துக்கு காரணம். எனினும், சில அணி நிர்வாகங்கள், தங்கள் வீரர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியது. சில நிர்வாகங்கள் அதை செய்யவில்லை. வீரர்களும், பயோ-பபுளில் இருப்பது பாதுகாப்பானது என்பதால், தடுப்பூசி வேண்டாம் என்று நினைத்தனர். அணி நிர்வாகங்களும் வலியுறுத்தவில்லை. இப்போது அதற்கான பயனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.