மும்பை: வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் மார்லன் சாமுவேல்ஸை அவ்வளவு எளிதாக எந்த ரசிகராலும் மறக்க முடியாது. களத்திலும் சரி, வெளியிலும் சரி, எப்போதும் கெத்தை விட்டுக்கொடுக்காமல் விளையாடுபவர்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் ஜெர்சிக்கு கூட வழியில்லாமல் இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கோப்பையை வென்றது. அப்போது இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற சாமுவேல்ஸ், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மைக் வைக்கப்பட்டிருந்த டேபிளில் கால்களை தூக்கி வைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தையே வெளுத்து வாங்கினார்.

அந்த காட்சியை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது. அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளாசியவர். ஷேன் வாட்சன், பென் ஸ்டோக்ஸ் போல் Big Match Player என்ற டேக்கை மார்லன் சாமுவேல்ஸ்-க்கும் கொடுக்கலாம்.
அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். இதனிடையே ஓய்வுக்கு முன் மார்லன் சாமுவேல்ஸ் அபிதாபி டி20 லீக் உள்ளிட்டவற்றில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாமுவேல்ஸ் மீது சூதாட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்தன. இதுதொடர்பான ஐசிசி விசாரணையில் மார்லன் சாமுவேல்ஸ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதில், 750 டாலருக்கு மேல் பணமாகவோ அல்லது பொருளாக கிடைத்தால் அதனை தொடரை நடத்தும் அமைப்பிற்கு தெரியப்படுத்த வேண்டும். இதனை சாமுவேல்ஸ் 4 முறை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊழல் தடுப்பு அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காதது மற்றும் விசாரணையை தாமதப்படுத்தியது உள்ளிட்டவற்றில் சாமுவேல்ஸ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு தண்டனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு கூட தகுதிபெறாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி திண்டாடி வரும் நிலையில், ஜாம்பவான் அந்தஸ்தில் உள்ள வீரர் சூதாட்ட புகாரில் சிக்கி குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.