ஆஸ்திரேலியா: ஐபிஎல் 2021 தொடரில் கலந்து கொள்வது குறித்து ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 14-வது சீசனுக்கான ஏலத்துக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. தக்கவைக்கப்பட்ட வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ-யிடம் அந்தந்த அணிகள் அளித்துள்ளன. வரும் பிப்.18-ம் தேதி சென்னையில் ஏலம் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு பெரும் ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.
இந்த ஆண்டு, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், ஸ்மித், ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ், உமேஷ் யாதவ், கீமோ பால், ஜேஸன் ராய், காட்ரெல், நீஷம் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டாலும் இவர்களை ஏலத்தில் எடுப்பதற்குப் பல சாத்தியங்கள் இருக்கின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் மார்னஸ் லபுஷேன் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது குறித்து தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐபிஎல் தொடரில் பங்குபெற பதிவு செய்வது குறித்து யோசித்து வருகிறேன். கல் விட்டெறிந்து பார்க்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ஐபிஎல் என்பது மிகப்பெரிய தொடர். தனிப்பட்ட முறையில், அதில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.