லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஆட்டமிழந்த பின்னர், தூங்கி கொண்டிருந்த லபுஷேன் பேட்டிங் செய்வதற்கு எழுந்து வந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூரின் அபாரமான போராட்டத்தால் 296 ரன்கள் சேர்த்தது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது. மிகப்பெரிய ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியதால், இந்திய அணி பவுலர்கள் விரைந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவாஜா - டேவிட் வார்னர் கூட்டணி களமிறங்கியது.

இந்திய அணி தரப்பில் முதல் ஸ்பெல்லை முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் கூட்டணி வீசியது. முதல் இன்னிங்ஸ் போல் அல்லாமல் சரியான லைன் மற்றும் லெந்தில் இந்திய பவுலர்கள் வீசினர். குறிப்பாக Wobble Seamல் சிராஜ் வீசிய பந்துகளில் ஆஸி. அணியின் டேவிட் வார்னரை கதி கலங்க செய்தது. இதனிடையே நீண்ட நேரமாக ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த லபுஷேன் ஓய்வறையில் பேட் கட்டிக் கொண்டு கண்கள் மூடி தூங்கும் காட்சிகள் காட்டப்பட்டது.
இந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் டேவிட் வார்னர் 1 ரன்னில் கேஎஸ் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்களின் உற்சாகம் விண்ணை தொட்டது. ரசிகர்களின் கரகோஷத்தால் எழுந்த லபுஷேன், டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததை பார்த்து உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்கினார். இதனால் லபுஷேன் தூக்கத்தை கெடுத்த டேவிட் வார்னர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.