மும்பை: ஆன்லைன் கேமிங் செயலி விளம்பரத்தில் நடித்ததால் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வீடு ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 18 ஆயிரம் ஒருநாள் ரன்கள் என்று யாரும் கற்பனை செய்ய முடியாத சாதனைகளை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைவிடவும் பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சச்சினை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கரின் விளம்பர வருவாய் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பேடிஎம் நிறுவனத்தில் ஃபர்ஸ்ட் கேம்ஸ் என்ற ஃபேண்டஸி கிரிக்கெட் ஆன்லைன் செயலியின் விளம்பரத் தூதராக சச்சின் டெண்டுல்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து சச்சின் அந்த ஆன்லைன் கேமிங் செயலிக்காக நடித்த விளம்பரம் ஒன்றும் வெளியாகியது.
பாரத் ரத்னா வென்ற ஒரு கிரிக்கெட் பிரபலம், ஆன்லைன் கேமிங் செயலிக்கு ஆதரவாக விளம்பரத்தில் நடிப்பது சரியா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் சச்சினின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா எம்எல்ஏ ஓம் பிரகாஷ் தலைமையில் ஏராளமானோர் மும்பையில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து எம்எல்ஏ ஓம் பிரகாஷ் பேசுகையில், இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லும் மோசமான கேமிங் செயலிகளுக்காக விளம்பரத்தில் நடித்து ரூ.300 கோடி வருமானம் ஈட்டுவதே முக்கியமென்றால், சச்சின் டெண்டுல்கர் பாரத் ரத்னா விருதை திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்ட ட்வீட் சர்ச்சைக்கு பின், சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமிங் செயலி விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதனால் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரின் போது ட்ரீம் லெவன் விளம்பரங்களில் நடித்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.