29வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 29வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.
மயங்க் அகர்வால் கேப்டன்
அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு அப்பெண்டிசைட்டிஸ் காரணமாக விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதையடுத்து இன்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம்பெறவில்லை. மாறாக மயங்க் அகவர்வால் இன்றைய போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
வேறு யாராவது கேப்டனாவாரா?
கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். இதையடுத்து மயங்க் அகர்வால் கேப்டனாக தொடர்வாரா அல்லது வேறு யாரையாவது அணி நிர்வாகம் கேப்டனாக நியமிக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
முக்கியமான கேப்டன்ஷிப்
கடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி சிறப்பான வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டது. இதனிடையே டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிக்கு எதிராக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டால் வெற்றிக்கான சாத்தியம் இருக்கும் என்றும் மயங்க் அகர்வால் கேப்டனாக செயல்படுவது அணிக்கு பின்னடைவு என்றும் கூறப்பட்டது.
99 ரன்கள் விளாசல்
இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்த நிலையில், டேவிட் மலன் தவிர்த்த மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில், மயங்க் அகர்வால் அவுட் ஆகாமல் 99 ரன்களை குவித்துள்ளார். கேஎல் ராகுல் போன்றே சிறப்பான பேட்டிங்கையும் அதன்மூலம் கேப்டன்ஷிப்பையும் இவர் மேற்கொள்வார் என்பது அவரது இன்றைய போட்டி மூலம் உறுதியாகியுள்ளது.