மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த இந்தப் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் அணி 20 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 163 ரன்களை எடுத்தது. அந்த அணியின் மாராஷ் சிறப்பாக ஆடி 57 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்தவர்களில் யாருமே குறிப்பிட்டுச் சொல்லும்படி ஆடவில்லை.
ஜெயவர்த்தனே 20 ரன்களும், பியூஷ் சாவ்லா 22 ரன்களும் எடுத்தனர். யுவராஜ் சிங் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மும்பை அணியின் பந்து வீச்சு சொதப்பலாக இருந்தது. உபரியாக மட்டும் 21 ரன்களை அள்ளிக் கொடுத்தனர். இருப்பினும் மலிங்கா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்கள அள்ளினார். அதில் முக்கியமானது நான்கு பந்துகளை வீசி 3 விக்கெட்களை வீழ்த்தியது. ஜாகிர்கான் 3 விக்கெட்கள வீழ்த்தினார்.
பின்னர் ஆடத் தொடங்கியது மும்பை இந்தியன்ஸ். தொடக்க ஆட்டக்காரர் தவன் 50 ரன்களைக் குவித்தார். கேப்டன் சச்சின் இந்த முறை பெரிய ஸ்கோரை எட்டாமல் 11 ரன்களில் வீழ்ந்தார்.
செளரப் திவாரி 31 ரன்களை விளாசினார். பொலார்டின் பங்கு 20 ரன்களாகும். இடையில் சில விக்கெட்கள் விழுந்ததால் கடைசி நேரத்தில் மும்பைக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆட்டத்திலும் விறுவிறுப்பு ஏற்பட்டது.
இருப்பினும் சதீஷ் ஆட்டமிழக்காமல் சாதுரியமாக ஆடி 19.3வது ஓவரில் வெற்றி தேடிக் கொடுத்தார். கடைசி மூன்று பந்துகள் இருந்த நிலையில், சதீஷும், ஹர்பஜன் சிங்கும் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் சூழ்நிலையை எதிர்கொண்டதால் மும்பை வெற்றி பெற்றது.
மும்பைக்கு இது 7வது வெற்றியாகும். அதேசமயம், பஞ்சாப் அணிக்கு இது 6வது தோல்வியாகும்.
தற்போது புள்ளிகள் அடிப்படையில் மும்பை அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது. அந்த அணி அரை இறுதிக்கு வெகு அருகில் நெருங்கி வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.