மும்பை பேட்டிங்
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. மும்பை அணியில் டி காக் 4, ரோஹித் சர்மா 13, யுவராஜ் சிங் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 58, க்ருனால் பண்டியா 42 ரன்கள் குவித்தனர். அவர்கள் இருவரும் வெளியேறியபோது ரன் ரேட் 7-ஐ ஒட்டியே இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களை ஹர்திக் பண்டியா - கீரான் பொல்லார்டு ஜோடி சந்தித்தது.
கடைசி 2 ஓவர்கள்
கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் குவித்தது இந்த ஜோடி. 19வது ஓவரில் ஷர்துல் தாக்குர் 16 ரன்களும், 20வது ஓவரில் பிராவோ 29 ரன்களும் கொடுத்தனர். இது பந்துவீச்சில் சென்னை அணி செய்த பெரிய தவறாக அமைந்தது. சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மும்பை அணியின் பலம்
அடுத்து, சென்னை அணியின் பேட்டிங் வரிசையை விட மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசை பலம் வாய்ந்ததாக இருந்தது. பும்ரா, மலிங்கா, பெஹ்ரண்டாப், க்ருனால் பண்டியா ஆகிய நால்வரும் அசத்தல் பார்மில் உள்ளனர் என்பது தெரிந்த விஷயம்.
ஏன் தேர்வு செய்தார்?
இவர்கள் நால்வரும் இந்தப் போட்டியில் களம் காண்பர் என்பதை தோனி முன்பே யூகித்திருக்க முடியும். அப்படி இருந்தும் ஏன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்தார் என்பது தெரியவில்லை.
தவறான முடிவு
வான்கடே மைதானத்தில் சேஸிங் சாதகமாக இருக்கும் என நினைத்து பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கலாம். ஆனால், அந்த முடிவு சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் திணறினர்.
ரன் ரேட் என்னாச்சு?
வாட்சன் 5, ராயுடு 0, ரெய்னா 16 ரன்களில் வெளியேறினர். ஜாதவ் - தோனி ஜோடி சிறிது நேரம் களத்தில் இருந்தாலும், இவர்கள் ரன் ரேட் என்ற ஒன்றை முற்றிலும் மறந்து விட்டது போல் ஆடினர். தோனி 21 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜாதவ் அரைசதம் வீண்
அடுத்து ஜடேஜா 1, பிராவோ 8 என பின்வரிசை பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். ஜாதவ் அரைசதம் அடித்தது மட்டுமே ஆறுதலான செய்தி. ஆனால், அவர் 54 பந்துகளில் 58 ரன்கள் அடித்து இருந்தார். அந்த ரன் குவிப்பு வேகம், 171 ரன்களை இலக்கை நோக்கி ஆடும் போட்டியில் பயனற்ற ஒன்றாகவே அமைந்தது.
மும்பை பந்துவீச்சு அசத்தல்
சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் சிறப்பாக பந்து வீசினர். மலிங்கா தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 7 ரன்னுக்கும் குறைவாகவே ரன் கொடுத்தனர்.
முக்கிய காரணங்கள்
சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் பந்துவீச்சின் போது கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தது, பேட்டிங்கில் அளவுக்கு மீறி நிதானம் காட்டியது இவை தான். அதிலும் கடந்த போட்டியில் அதிரடி காட்டிய தோனி, இந்தப் போட்டியில் ரன் குவிக்கத் திணறி வெற்றியை மும்பை அணிக்கு தாரை வார்த்தார் என்பதே உண்மை.