சென்னை: ஐபிஎல் தொடரின் இரண்டு ஜாம்பவான்களான மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள், 2025 ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 20 அன்று மும்பை வான்கடேவில் மோத உள்ளன. இந்தப் போட்டியின் முடிவு, மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை பாதிக்கக்கூடும்.
தற்போது (ஏப்ரல் 19 நிலவரப்படி), 2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் மோசமாக, 7 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் இடம் பெற்று தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த இரு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

ஏப்ரல் 20 அன்று நடைபெற உள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினால், இரு அணிகளும் 8 போட்டிகள் முடிவில் தலா 3 வெற்றிகளுடன் கிட்டத்தட்ட சமநிலைக்கு வந்துவிடும். அப்போது, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மீதம் தலா 6 போட்டிகளே இருக்கும். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற, அந்த 6 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற இக்கட்டான நிலை இரு அணிகளுக்கும் ஏற்படும். குறிப்பாக, இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை மேலும் மோசமாகும். சிஎஸ்கே அணி வெல்வதன் மூலம், மும்பை அணியை இந்த நெருக்கடிக்குத் தள்ள முடியும்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை (தலா 5) வென்ற இரண்டு வெற்றிகரமான அணிகள் மும்பையும் சென்னைையும்தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த இரண்டு அணிகளும் தங்கள் பழைய ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வருகின்றன. இந்த ஆண்டும் அதே நிலை தொடர்கிறது. தற்போது, இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முன்னேற, ஒன்றையொன்று வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில், அதாவது 'ஒருவரின் காலை ஒருவர் வாரிவிடும்' நிலையில் உள்ளன.
ஒருவேளை, இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தினால், சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் மிகவும் பின்தங்கிவிடும். அதன் பிறகு, சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் எனில், மீதமுள்ள 6 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய மிகக் கடினமான நிலை ஏற்படும். கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிலைக்குத் தள்ளப்படும். இதனால் சிஎஸ்கே-வின் பிளே ஆஃப் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிடும்.
இப்படி, ஒரு காலத்தில் ஐபிஎல்-ஐ கட்டி ஆண்ட இரண்டு மாபெரும் அணிகள், இன்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கே போராடும் நிலைக்கு வந்துள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று உள்ளன.