மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதம் அடித்தார். ஆனால், அதனால் எந்த பயனும் இல்லாமல் போனது. சதம் அடித்த பின் ரோஹித் சர்மா எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை உறுதி செய்ததால் மிகவும் இறுக்கமாக இருந்தார் ரோஹித் சர்மா.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். சுழற் பந்துவீச்சாளர்கள் வீசினால் சிஎஸ்கே பேட்ஸ்மேன் சிவம் துபே சிக்ஸ் அடிப்பார் என பயந்த அவர் தானே மூன்று ஓவர்கள் வீசினார். ஆனால், அந்த மூன்று ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக் கொடுத்து சொதப்பினார் பாண்டியா.

அதிலும் அவர் வீசிய 20வது ஓவரில் சிஎஸ்கே அணி 26 ரன்கள் எடுத்தது. குறிப்பாக கடைசி நான்கு பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த தோனி 20 ரன்கள் சேர்த்தார். அதன் காரணமாக 200 ரன்களை எட்டாது என கருதப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்தது.
வான்கடே மைதானத்தில் இந்த இலக்கை எளிதாக எட்டலாம் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி நம்பிக்கையுடன் சேஸிங் செய்தது. இஷான் கிஷன் - ரோஹித் சர்மா முதல் 7 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணியை சிதற விட்டனர். ஆனால், அதன் பின் விக்கெட்கள் விழத் தொடங்கின. ஒரு பக்கம் ரோஹித் சர்மா தூணாக நின்று ரன் குவித்தார்.
இந்த நிலையில் 14வது ஓவரில் திலக் வர்மா ஆட்டமிழந்த நிலையில் ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்தார். அப்போது 6 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதாவது ஓவருக்கு 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் வீணடித்த 6 பந்துகளால் ஒரு ஓவருக்கு 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என தேவைப்படும் ரன் ரேட் எகிறியது.
ஒரு புறம் ரோஹித் சர்மா தனியாளாக போராடிக் கொண்டிருக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்பே இல்லாமல் ரன் ரேட்டை சொதப்பி விட்டு சென்றார். அதன் பின் மீள முடியாத மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை நோக்கி சென்றது. ஆனாலும், ரோஹித் சர்மா கடைசி வரை களத்தில் நின்று கடைசி ஓவரில் சதம் அடித்தார். இது அவரது இரண்டாவது ஐபிஎல் சதம் ஆகும். மேலும், எட்டாவது டி20 சதம் ஆகும்.
சதம் அடித்த பின்னர் ரோஹித் சர்மா எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. மாறாக இறுக்கமாக நின்றார். வெற்றி பெற வேண்டிய போட்டியில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா சொதப்பியதால் மும்பை அணி தோல்வி அடைந்தது. சதம் அடித்தும் அணி தோல்வி அடைந்ததால் ரோஹித் சர்மா தன் பேட்டை கூட உயர்த்திக் காண்பிக்கவில்லை.