MI vs CSK: “நான் கட்டிய மும்பை இந்தியன்ஸ் சாம்ராஜ்யம் வீழ்ந்தது”.. கண்ணீர் விட்ட ரோஹித் சர்மா
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தியது. இந்த அவமானகரமான தோல்வியைத் தாங்க முடியாமல், மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வறையில் உடைந்து போய் கண்ணீர் விட்டதாக கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தான் கட்டி எழுப்பிய ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் கண்முன்னே சரிவதைக் கண்டு 'ஹிட்மேன்' கலங்கியதாக அவரது ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த 33-வது லீக் போட்டியில், சஞ்சு சாம்சன் என்ற ஒற்றை மனிதர் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 54 பந்துகளைச் சந்தித்த அவர் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி, சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 104 ரன்களுக்குச் சுருண்டது. சென்னை தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை பேட்டிங் வரிசையைச் சிதைத்தார்.

தசைப்பிடிப்பு காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாத ரோஹித் சர்மா, மைதானத்திற்கு வெளியே அமர்ந்து தனது அணி வீழ்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார். இம்பாக்ட் வீரராக அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கோப்பையை வென்று தந்த ஒரு நாயகன், தனது அணி போராடக் கூட முடியாமல் 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைக் கண்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானார். போட்டி முடிந்த பிறகு ஓய்வறையில் அவர் முகம் வாடி, கண்கலங்கி அமர்ந்திருந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரவி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே-வுக்கு எதிராக மும்பை அணி எடுத்த மிகக்குறைந்த ஸ்கோர் 104 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2023-ம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆடிய 6 போட்டிகளில் 5-ல் மும்பை தோற்றுள்ளது. தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, "பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்குக் காரணம். ஆடுகளத்தில் எந்தக் குறையும் இல்லை, நாங்கள் தான் சரியாகப் பேட்டிங் செய்யவில்லை" எனத் தெரிவித்தார்.
இந்த இமாலய வெற்றியால் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 7 போட்டிகளில் 5 தோல்விகளைச் சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 8-வது இடத்தில் தத்தளித்து வருகிறது. ரோஹித் சர்மாவின் அழுகை, மும்பை இந்தியன்ஸ் அணியின் பொற்காலம் முடிவுக்கு வருகிறதோ என்ற அச்சத்தை அந்த அணி ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், 103 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை நோக்கி வேகமாக நகரத் தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications