மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அபார சதம் விளாசி அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்ட சஞ்சு சாம்சன், தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது இந்த நேர்த்தியான ஆட்டம் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் வெறும் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 6 இமாலய சிக்சர்களும் அடங்கும். ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்தது மைதானத்தையே அதிர வைத்தது. 184 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ரன்களைக் குவித்தார். இவரது அதிரடியால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரைப் பெற்றது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியை சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

கடந்த சீசனில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்குக் கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியது. அந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை சஞ்சு சாம்சன் தற்போது நிரூபித்துள்ளார். இது நடப்பு சீசனில் அவர் அடிக்கும் இரண்டாவது சதமாகும். இதற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 115 ரன்கள் விளாசி இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு சிஎஸ்கே வீரரும் ஒரு சீசனில் 2 சதங்களை அடித்ததில்லை என்ற சாதனையை, பாதி சீசன் முடிவதற்குள்ளேயே சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இவரது இந்தத் தரம் வாய்ந்த ஆட்டத்தைக் கண்டு முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர். முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறுகையில், "சஞ்சு சாம்சன் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவரது ஆட்டம் மிகவும் நேர்த்தியாகவும், கண்களுக்கு விருந்தாகவும் உள்ளது" எனப் புகழ்ந்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "சிஎஸ்கே அணியில் இதுவரை எவரும் ஒரு சீசனில் 2 சதங்களுக்கு மேல் அடித்ததில்லை. சஞ்சு தனது முதல் சீசனிலேயே இந்த மைல்கல்லை எட்டிவிட்டார். ஸ்டைலிஷ் சாம்சன்!" எனப் பாராட்டியுள்ளார்.
இர்பான் பதான் தனது பதிவில், "ஒரு பேட்ஸ்மேன் தனது உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தால் எப்படி விளையாடுவாரோ அப்படி சஞ்சு விளையாடுகிறார்" என்றார். ஷிகர் தவான் கூறுகையில், "மிகவும் நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி இந்தத் தகுதியான சதத்தைப் பெற்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை வேகப்பந்து வீச்சாளர்களைக் குறிவைத்துத் தாக்கிய சஞ்சு, வேகப்பந்து வீச்சில் மட்டும் 40 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். சுழற்பந்து வீச்சில் 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி தொடர்ந்தால் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.