சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடையுமோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. ஆனால், 18வது ஓவரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எடுத்த தவறான முடிவால் மும்பை அணி தோல்வி அடைந்தது.
மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தபோது சிஎஸ்கே அணி இடையே வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. முதல் விக்கெட்டாக ராகுல் திரிபாதி 2 ரன்களில் ஆட்டம் இழந்ததற்கு பிறகு ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடினர்.

ருதுராஜ் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் தனது அபாரமான பந்துவீச்சில் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து விக்னேஷ் புத்தூர் சிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகியோரது விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
சிஎஸ்கே அணி 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த சாம் கர்ரன் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். ரவீந்திர ஜடேஜா 17 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரா மட்டுமே ஒரு புறம் நின்று அபாரமாக அரை சதம் அடித்து ஆடி இருந்தார். இந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது சிஎஸ்கே அணி.
அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட் அல்லது தீபக் சாகரை கடைசி 3 ஓவர்களில் பயன்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் இருவரும் பவர் பிளேவில் ஒரு ஓவருக்கு தலா 9 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தனர். கடைசி நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது எப்போதும் ஆபத்தானதாக முடியும்.
சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளில் சில சிக்ஸர்களை அடித்தாலும் போட்டியின் முடிவு மாறிவிடும். அப்படி இருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18-வது ஓவரை வீச விக்னேஷ் புத்தூரை அழைத்தார். அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில் அவருக்கு 15வது ஓவருக்கு முன்பே தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.
அதை செய்யாமல் முதல் தவறை செய்த சூர்யகுமார் யாதவ், விக்னேஷ் புத்தூருக்கு 18-வது ஓவரில் பந்துவீச வாய்ப்பளித்தார். அது மிகப்பெரிய தவறாக அமைந்தது. அந்த ஓவரை சந்தித்த ரச்சின் ரவீந்திரா இரண்டு சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் சிஎஸ்கே அணி 15 ரன்கள் எடுத்தது.
அதன் மூலம் கடைசி இரண்டு ஓவர்களில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அளவுக்கு நிலைமை மாறியது. 19-வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே அணி, கடைசி ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திரா அடித்த சிக்ஸர் மூலம் வெற்றியைப் பெற்றது. ஒருவேளை 18-வது ஓவரை ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசியிருந்தால், ரச்சின் ரவீந்திராவால் எளிதாக சிக்ஸர் அடிக்க முடியாமல் போயிருக்கலாம். அது போட்டியின் முடிவை மாற்றி இருக்கலாம்.
ஆனால், விக்னேஷ் புத்தூரை பந்து வீச அழைத்தது கேப்டன் சூர்யகுமார் யாதவின் தவறான முடிவாகும். விக்னேஷ் புத்தூர் தான் வீசிய முதல் மூன்று ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால், நான்காவது ஓவரில் 15 ரன்கள் வாரி இறைத்ததால் அவர் போட்டியின் முடிவில் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நூர் முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
செய்தி சுருக்கம்: