சந்தேகம்
யுவராஜ் சிங் கடந்த ஐபிஎல் சீசன் போல சொதப்பாமல் ஆடுவாரா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. டெல்லி அணி நிர்ணயித்த 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது மும்பை.
நிலைத்த ஆட்டம்
பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் களமிறங்கிய யுவராஜ் சிங், மற்ற விக்கெட்கள் சரிந்து வந்த போதும் நிலைத்து நின்று ஆடினார். யுவராஜ் சிங்-ஆல் இந்த போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி தேடித் தர முடியாவிட்டாலும், அரைசதம் அடித்து தெறிக்கவிட்டார்.
மெய்சிலிர்த்தது
யுவராஜ் சிங் அதிரடி காட்டுவதற்கு முன்பு, பேட்டிங் செய்ய களமிறங்கிய போதே மும்பை வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "யுவராஜ், யுவராஜ்" என பெரும் முழக்கமிட ஆரம்பித்தனர். அப்போதே மெய்சிலிர்த்தாலும், யுவராஜ் சிங் பெரிதாக ரன் குவித்து வெற்றி பெற்றுத் தர வேண்டாம், ஒரு 25 ரன் அடித்தால் கூட போதும் என ஒவ்வொரு ரசிகனின் மனதும் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தது.
ரசிகர்கள் எண்ணிக்கை
யுவராஜ் சிங் 4 ரன்கள் அடித்து இருந்த போது ஹாட்ஸ்டார் மூலம் மும்பை - டெல்லி போட்டியை பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை 39 லட்சமாக இருந்தது.
காட்டுத்தீ
மற்ற மும்பை வீரர்கள் விக்கெட்டை இழந்து வரும் நிலையில், யுவராஜ் சிங் நிலைத்து ஆடி வருகிறார் என்ற செய்தி சில நிமிடங்களில் காட்டுத்தீயாக பரவியது. யுவராஜ் 28 ரன்கள் அடித்து இருந்த போது ஹாட்ஸ்டாரில் போட்டியை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்தை தொட்டது.
யுவராஜ் அரைசதம்
இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதில் 5 ஃபோர், 3 சிக்ஸ் அடங்கும். இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் யுவராஜ் சிங்கை ஒருவரும் ஏலம் கேட்காத நிலையில், கடைசி நொடியில் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இரு ஆண்டுகள்
கடந்த 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங் கடைசியாக அரைசதம் அடித்து இருந்தார். அதன் பின் சுமார் இரு ஆண்டுகள் கழித்து மீண்டும் அரைசதம் அடித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் படு மோசமாக ஆடிய வரலாற்றை ஒரே ஒரு அரைசதம் மூலம் மாற்றியுள்ளார்.
இன்னும் முடியவில்லை
இதன் மூலம் யுவராஜ் சிங் தன் கதை இன்னும் முடியவில்லை என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். யுவராஜ் சிங்கிடம் பழைய துடிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால், அவர் ஓய்ந்து விட மாட்டார். புற்றுநோயை தூக்கிப் போட்டு பந்தாடிய அவரால் அத்தனை சீக்கிரம் ஓய்வு பெற்று விட முடியாது.