முல்லான்பூர்: ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும், இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது.
இதை அடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் இளைய மகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்தக் காட்சி பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் சகோதரி ஷாநீல் கண்கலங்கிய நிலையில் இருந்தார். அவரையும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.

2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் இருந்தன. இந்த நிலையில், எலிமினேட்டர் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதின. எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்தால் அத்துடன் தொடரிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
டாஸ் முடிவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த அணி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்களைச் சேர்த்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன் சேர்த்தனர்.
சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்களையும், திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 13வது ஓவர் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதன் பின் 14வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அத்துடன் அந்த அணி அழுத்தத்திற்கு உள்ளானது.
துவக்க வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார். ஆனால், வாஷிங்டன் சுந்தரைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று அதிரடியாக ரன் சேர்க்கவில்லை. சாய் சுதர்சன் கடைசி நேரத்தில் 15 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.
ஆனால் அதற்கு முன்பே ரன் ரேட் அழுத்தம் அந்த அணியைச் சரிவில் கொண்டு சென்றது. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.