மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசியது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த ஓவரில் மட்டும் 3 ஒய்டுகள், 2 நோ-பால்களை வீசிய ஹர்திக் பாண்டியா, மொத்தமாக 18 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. முதல் 10 ஓவர்களில் 89 ரன்களை சேர்த்த மும்பை அணி, அடுத்த 10 ஓவர்களில் 66 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் போல்ட் வீசிய 2வது ஓவரிலேயே சாய் சுதர்சன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சுப்மன் கில் - பட்லர் கூட்டணி இணைந்தது. அப்போது மழை சாரல் தொடங்கியதால், டிஆர்எஸ் முறை செயல்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 5 ஓவர்களாவது வீசப்பட்டிருக்க வேண்டிய நிலை வந்தது.
இதனை கருத்தில் கொண்டு மும்பை அணி பும்ராவை பவர் பிளே ஓவர்களிலேயே அட்டாக்கில் கொண்டு வந்தது. அந்த ஓவர்களை கவனமாக எதிர்கொண்ட நிலையில், குஜராத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டிஆர்எஸ் விதிப்பதி குஜராத் அணி 40 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிய வந்தது.
இதனால் மும்பை அணி வெல்லும் சூழலில் இருந்தது. 7 ஓவர்கள் வரை மும்பை அணியின் கைகளில் ஆட்டம் இருந்த நிலையில், 8வது ஓவரை வீசுவதற்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா வந்தார். ஐபிஎல் தொடரில் சுப்மன் கில்லை 4 முறை ஹர்திக் பாண்டியா வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியா பந்தை கையில் எடுத்தது தெரிய வந்தது.
இந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 4வது பந்தில் இருந்து ஹர்திக் பாண்டியாவிற்கு கண்டம் தொடங்கியது. அந்த பந்தில் ஒய்டு வீசிய நிலையில், தொடர்ந்து நோ-பால், ஒய்டு, நோ-பால், 6, 1, ஒய்டு, 0 என்று மொத்தமாக 11 பந்துகளை வீசினார். இந்த 11 பந்துகளில் மொத்தமாக 18 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் ஆட்டத்தில் குஜராத் அணியின் கைகள் ஓங்கியது.